Friday, December 23, 2011

இந்த பிஞ்சு மகளின் அவல நிலைக்கு யார் காரணம்...?????????

இந்த பிஞ்சு மகளின் அவல நிலைக்கு யார் காரணம்...?????????



அன்புள்ள மகளே!

உன் நிலை கண்டு என் விழியில் ஓடும் கண்ணீரை என்னால் கட்டுப் படுத்த முடியாதிருக்கிறது.

பயத்தில் ஆடை நனைந்துப் போன உன்னுடைய காற்சட்டையும் , அதனை சட்டை செய்யாமல் உன்னை தர தரவென இழுத்து செல்லும் சியோனிஸ மிருகங்களும் ............இதென்ன கொடுமை!

அச்சத்தில் உறைந்துப் போன உன்னுடைய அழுகையின் அவலம் எனக்கு இங்கே கேட்கிறது.

எனக்கு மட்டுமல்ல...என் போன்ற பலருக்கும் அது புரிகிறது.

ஆனால், என்ன செய்வது என்றுதான் புரிய வில்லை.

அதனை புரிய வைக்கவும் இங்கேயாரும் இல்லை.

புரிந்துப் போன என்போன்றவர்களுக்கு புரியாதவர்களுக்கு புரிய வைக்கும் முறையும் புரியவில்லை.

என்ன செய்ய?

நீ செய்த   குற்றம்தான் என்ன?

அந்த மிருகங்களை நோக்கி கற்களை எறிந்ததுதான் உன்னுடைய குற்றமா?

நீ எறியும் கற்களுக்கு என்ன வலிமைத்தான் இருக்கப் போகிறது?

அந்த மிருகங்களோ உன்னை நோக்கி பொஸ்பரஸ் குண்டுகளை அல்லவா எறிகிறார்கள்?

அழாதே என் அன்பு மகளே!


சோதனை உனக்கல்ல!

உன்னுடைய துர்பாக்கிய நிலை எங்களுடைய சோதனையாக இருக்கிறது.

உனக்கு இன்னுமொரு உண்மை தெரியுமா?

உலகத்தில் இருக்கின்ற அநேக முஸ்லிம் நாடுகளில் முஸ்லிம் பெண்களுக்கு உரித்தான உரிமைகள் மறுக்கப் பட்டுள்ளன.

அந்த நாடுகளில் வாழ்கின்ற மாற்று மத சகோதரர்களின் நிலையோ அதை விட பரிதாபமானது. 

நாம் உங்களைப் போன்று அடக்கி ஒடுக்கப் பட்டவர்களுக்காக , அவர்களின்  விடுதலைக்காக என்ன செய்தோம் என்று நாளை மறுமையில் அல்லாஹ் எங்களிடம் கேட்கப் போகிறான்.

உனக்காக, உன் போன்று அடக்கு முறைக்கு ஆளாக்கப் பட்ட அப்பாவிகளுக்கு  நாம் என்னதான் செய்திருக்கிறோம்?

எங்களது தலைவர்களின் தவறான தீர்மானங்களின் காரணமாக எங்களை நாங்களே தொலைத்துக் கொண்டோம்.

அந்தத் தலைவர்களின் வசீகரமான பேச்சில் கணத்தில் தொலைந்துப் போன எங்களால் எங்களை மீண்டும் தேடிக் கொள்ள முடிய வில்லை.

ஏனெனில், நாம் தொலைந்துப் போனதை நாம் உணர்ந்துக் கொள்ளவில்லை.

பணத்துக்கு விலை போன எங்களது தலைவர்களை நம்பி நாம் மோசம் போனோம்.

தனிப்பட்ட முறையில் அவர்களைப் பணக்காரர்களாக்கிய இஸ்லாத்தின் எதிரிகள் அவர்களைக் கொண்டே எங்களை அடிமைப் படுத்திக் கொண்டார்கள்.

அடிமைத்தனம் இல்லை என்று யார் சொன்னது?

நாம் அடிமைகளாகத்தான்   இருக்கிறோம்.

சுதந்திரம் என்ற பெயரில், தலைவர்களின் வசீகரமான கருத்துக்களுக்கு அடிமையாகி எங்களை விற்று விட்டோம்.

அவர்களைமீறி எங்களால் சிந்திக்க முடியாதுள்ளது.

அவர்கள் எங்களது இளமையை எங்களுக்கு தெரியாமல் இஸ்லாத்தின் பெயரால் கொள்ளையிட்டார்கள்.

எங்களுடைய பெற்றோர்கள் கதி கலங்கியிருக்க நாம் எங்களது நயவஞ்சக தலைவர்களால் தவறாக வழி நடாத்தப் பட்டோம்.

எங்களைப் போன்றே தவறாக வழி நடாத்தி அழைத்து வரப் பட்ட இன்னுமொரு இளைஞர்கள் கூட்டத்துக்கு எதிராக  நாம் போர் கோடி தூக்கினோம்.

அல்லாஹ்வின் பெயரால் அல்லாஹ்வுக்காக வேண்டி நாம் இருவரும் எதிரெதிராக களம் இறங்கினோம்.

வயோதிகத்தின் பயங்கரத்தில், சிதைந்துப் போன சமூக பிரிவுகளில்    செய்வதறியாமல் எங்களது மூப்படைந்த பெற்றோர் ஓரம் கட்டப் பட்டார்கள்.

எங்களது வெற்றிகளின் இலாபங்களை எங்களது தலைவர்களும் அவர்களது எஜமானர்களும் சுவீகரித்துக் கொண்டார்கள்.

தோல்விகளின் வேதனைகளை எங்கள் குடும்பத்தினர்களே கண்ணீருடன் ஏற்றுக் கொள்ள நிர்ப்பந்திக்கப் பட்டார்கள்.

எங்களது வீரமெல்லாம் எங்களை அழிப்பதிலேயே வீணாகிக் கொண்டிருக்கிறது.

எங்களது அறிவுகளையும், இளமைகளையும் அல்லாஹ்வின் பெயரால் நாம்  மேற்குக்கும்   கிழக்குக்கும் தாரை வார்த்து கொடுத்துவிட்டோம்.

எங்களது தலைவர்கள் என்று நாம் நம்பிய எங்களது மார்க்க அறிஞர்கள் எங்களை மோசம் செய்து விட்டார்கள்.

எங்களது இளமையை நாம், எங்களை சுரண்டி கொழுத்துப் போன எங்களது தலைவர்களுக்கு அடமானம் வைத்து விட்டு விளித்துக் கொண்டிருக்கிறோம்.

அந்த தலைவர்களோ தங்களது தவறுகளை உணர்ந்துக் கொள்ளும் அறிவைக் கூட பெற்றிருக்க வில்லை என்பதை எம்மை நாம் தொலைத்த பிறகுதான் புரிந்துக் கொண்டோம்.

மகளே!

உன்னுடைய, உன் போன்று அடக்குமுறைக்கு ஆளாக்கப் பட்டிருக்கிற அப்பாவிகளின் இந்த அவல நிலையின் ஆரம்பம் எது என்று உனக்குத் தெரியுமா?

அநீதத்தை ,அடக்கு முறையை ,நடந்துக் கொண்டிருக்கும் அநியாயத்தை தட்டிக் கேட்கும் வலிமையை நாம் இழந்துப் போன அந்த தருணம் என்ன என்று உனக்குத் தெரியுமா?

எங்கள் நபி சல்லல்லாஹு அலைஹி   வஆலிஹி வசல்லம் அவர்கள் உன் போன்ற மகள்மார்களைக் காக்கும்வலிமைக் கொண்ட இஸ்லாமிய தலைமைத்துவத்தை ஆவணமாக எழுத முனைந்த பொழுது அவர்களின் அருமைத் தோழர்கள் அதற்கு தடையாக இருந்தார்களாம்.

அந்தக் கணத்திலேயே நாம் எம்மை தொலைத்துக் கொண்டோம்.

உன் போன்ற குழந்தைகளின் பாதுகாப்பையும் இழந்துப் போனோம்.

முஸ்லிம் சமூகத்துக்கு பெரும் சோதனையாக அமைந்த அந்தத் தருணத்தில் இஸ்லாத்தின் எதிரிகள் தம்மையும், தங்களது வெறித்தனமான வெற்றியின்   தளத்தையும் பெற்றுக் கொண்டார்கள்.

வெற்றியடைந்த அந்த எதிரிகள் இஸ்லாமியர் என்ற பெயரிலும், நபி சல்லல்லாஹு அலைஹி   வஆலிஹி வசல்லம் அவர்களின் தோழர்கள் என்ற போர்வையிலும் இஸ்லாத்தின் பெயராலேயே இஸ்லாத்தை புதைத்து விட்டார்கள்.

உன் போன்ற நிலையில் இருந்த ,அநீதத்துக்கு ஆளானவர்களுக்கு பாது காப்பு அரணாக இருந்த இஸ்லாம் நபி சல்லல்லாஹு அலைஹி   வஆலிஹி வசல்லம் அவர்களின் மறைவுடன் மாறிப் போனது.

இஸ்லாத்தின் தலைமைத்துவத்தில் பலாத்காரமாக அமர்ந்துக் கொண்ட இஸ்லாத்தின் எதிரிகள் இஸ்லாத்தின் பெயராலேயே அநீதம்  செய்யத் துவங்கினார்கள்.

அந்த துரோகிகளின் வழிவந்த ஆட்சியாளர்கள் சுமார் ஆயிரத்து ஐநூறு வருடங்களாக இஸ்லாத்தின் பெயரால் உலகத்தையே கபளீகரம் செய்தார்கள்.

உன் போன்ற குழந்தைகளையே இஸ்லாத்தின் பெயரால் கொன்றுக் குவித்தார்கள்.

இஸ்லாத்தின் பெயரால் இன்னமும் அதனை செய்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

கனீமத் என்ற பெயரில் பெண்களை பலாத்காரம் செய்தார்கள்.உலகத்தை கொள்ளையிட்டார்கள்.

எங்களது உலமாக்கள் அந்த அராஜகமான செய்கைகளுக்கு மார்க்க 'பத்வா' கொடுத்து இஸ்லாமிய போர்வை போர்த்தினார்கள்.

அதன் பின்னர், சமத்துவத்தினதும், சமாதானத்தினதும் கேந்திர நிலையமான மஸ்ஜிதுகள் பிரிவுகளினதும் ,பிளவுகளினதும் தளங்களாக மாறி விட்டன.

ஏகத்துவம் போதிக்கும் இஸ்லாமிய கலாசாலைகள் ஏகாதிபத்திய   நியாயங்களை போதிக்கத் துவங்கின.

பிரமிட்டுக்களில் சிறையான பிர்அவ்ன்கள் மஸ்ஜித்களில் விடுதலையாகத் துவங்கினார்கள்.

அநீதத்துக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய மிம்பர் மேடைகள் அநியாயக் காரர்களை காப்பதற்காக குரல் கொடுக்கத் துவங்கியது.

அன்பு மகளே!

அந்த அநியாயக் காரர்கள் செய்த அநியாயத்தின் பின் விளைவாக இன்று நீ சிக்கிக் கொண்டாய்.

நமது கடந்த கால தவறுகளைப் புரிந்துக் கொள்வதில் மட்டுமே எங்களால் அந்த தவறுகளின் கொடூர விளைவுகளை விட்டும் தப்பும் முறையை அறிந்துக் கொள்ள முடியும்.

ஆனால், நாம் எங்களது மூதாதையர் செய்த தவறுகளில் நியாயம் கற்பிக்கப் பட்டவர்களாகவே எங்களது மத குருமார்களினால் வழி நடாத்தப் பட்டோம்.

அதனால், தவறுகளில் சரி கண்டு தவறிழைக்கத் துவங்கினோம்.

இத்தகைய எங்களது துரதிர்ஷ்ட நிலையில் அவ்வாறான தவறுகளின் பயங்கர விளைவுகளை விட்டும் எப்படித்தான் தப்ப முடியும்?

என்னுடைய மகளே!

நபி சல்லல்லாஹு அலைஹி   வஆலிஹி வசல்லம்  அவர்களின் வழித் தவறிய தோழர்கள் செய்த தவறுகளின் நிகழ கால விளைவாகவே நான் உன்னைக் காண்கிறேன்.

அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்துவதைத் தவிர என்னால் இப்பொழுது ஒன்றும் செய்ய முடியாதுள்ளது.

 என்னுடைய அன்பு மகளே!

என்னுடைய இயலாமைக்காக என்னை மன்னித்துக் கொள்.

யா! அல்லாஹ் ..என்னுடைய மகளுக்கும், அவள் போன்று அல்லலில் சிக்கியிருக்கும் அனைத்து பெண்களுக்கும் , பெண் மகவுகளுக்கும் நீயே துணையாக இருப்பாயாக!

யா! அல்லாஹ்.. அநியாயக் காரர்களின் அநியாயத்துக்கு  ஆட்பட்டு தவித்துக் கொண்டிருக்கும் அனைத்து பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் நீயே பாதுகாப்பாக இருப்பாயாக!

யா! அல்லாஹ்...நபி சல்லல்லாஹு அலைஹி   வஆலிஹி வசல்லம் அவர்களின் தோழர்கள் என்று நாம் நம்பிய துரோகிகள் செய்த பாவத்துக்காக நீ எங்களை சோதித்து விடாதே!

அந்தத் துரோகிகளை புரிந்துக் கொள்ளும் அறிவை எங்களது முஸ்லிம் சமூகத்துக்கு தந்தருள்வாயாக!

Saturday, December 17, 2011

சோதனைகளின் மறுபக்கம்...........?????

சோதனைகளின் மறுபக்கம்...........?????




இஸ்லாமிய சமூக சேவை நிறுவனம் ஒன்றில் பணி புரியும் எம்முடைய நண்பர் ஒருவர் அவரின் மேமன் பாய் நண்பர் ஒருவரைப் பற்றி சொன்ன கதை இது.

எம்முடைய நண்பரின் அலுவலகத்தில் இஸ்லாமிய சமூக சேவைக்காக ஒரு தொகைப் பணத்தை வரவு செலவை மட்டிட்டு அந்த இயக்கத்தினர் நண்பரிடம் கொடுத்து வைத்து இருப்பார்கள்.

நண்பருக்கு அந்தப் பணத்தை சுதந்திரமாக செலவழிக்கும் உரிமை   கிடையாது.

அவருக்கு அனுமதிக்கப் பட்ட செலவை மாத்திரமே அவரால் செய்ய    முடியும்.

இந்த நிலையில் ஒரு நாள், அவரின் மேமன் பாய் நண்பர் அந்த அலுவலகத்தில் இருக்கும் பொழுது ஒரு பெண் வந்து யாசகம் கேட்டு   இருக்கிறாள்.

நண்பர் ஒரு உதவியும் அந்தப் பெண்ணுக்கு செய்யவில்லையாம்.

அதற்கான நிலையில் அவர் இல்லை போலும்.

அதனைக் கண்ட அவரின் நண்பர் உடனடியாக அந்தப் பெண்ணுக்கு கொஞ்சம் பண உதவி செய்து விட்டு, நமது நண்பரிடம் கொஞ்சம் பணத்தைக் கொடுத்து "யாராவது ஏதாவது கேட்டு இங்கே வந்தால் அவரை வெறும் கையுடன் திருப்பி அனுப்பாதீர்கள்.குறைந்தது பத்து ரூபாயாவது கொடுத்து அனுப்புங்கள்." என்று உபதேசித்து இருக்கிறார்.

அதன் பின்னர் அந்த மேமன் பாய் நண்பர் அந்த இஸ்லாமிய இயக்கத்தின் அலுவலகத்துக்கு வரும் தோறும், பணம் கொடுத்து அந்தப் பணத்தை யாசிக்கும் மக்களுக்கு என்றே ஒதுக்கியும் வைத்திருக்கிறார்.

நமது நண்பருக்கு ஆச்சரியம்.

ஒரு நாள் அவர் தனது நண்பரிடம் அவர் இவ்வாறு செய்வதற்கான காரணத்தைக் கேட்டிருக்கிறார்.

அதற்கு அவர் "இது எங்களது பாட்டனாரின் வசிய்யத்." என்று சொல்லிவிட்டு தொடர்ந்து "எங்களது குடும்பத்தினர் இதனை தவறாமல் செய்து வருகிறோம்" என்றார்.

"வசிய்யத்தா?" என்று நண்பர் ஆச்சரியத்துடன் கேட்டிருக்கிறார்.


அதற்கு அந்த மேமன் பாய் நண்பர் "எங்களது பாட்டனார் கொழும்பில் கடை வைத்திருக்கும் பொழுது யாராவது அவரிடம் ஏதாவது உதவி கேட்டு வந்தால் அவரின் தேவைகளை மறுக்காமல் தன்னால் முடிந்த அளவு நிறை வேற்றி வைப்பார்.அது மட்டுமன்றி, யாராவது அவரிடம் யாசித்தால் அவர்களை விரட்டவும் மாட்டார்." என்ற நண்பரின் நண்பர் தொடர்ந்து "ஒரு நாள் அவர் எதிர் பார்க்காத சம்பவம் ஒன்று அவரின் வாழ்வில் நடந்தது..."என்றார்.