எமது நண்பர் டாக்டர் அன்புராஜ் சுவனத்து ஹூருல் ஈன்களைப்பற்றி தனது பின்னூட்டம் ஒன்றில் சில சந்தேகங்களைக் கேட்டிருந்தார்.
அவர் தனது பின்னூட்டத்தில்......... "சுவனம் செல்லும் பாக்கியம் கிட்டும் ஒரு ஆண் மகனுக்கு சுவனத்தில் எழுபத்து இரண்டு ஹூருல் ஈன்கள் மனைவிமார்களாக கிடைப்பார்கள் என்று அலிஸீனா என்பவரின் இணையத் தளத்தில் கண்டேன்.அப்படி என்றால் சுவனம் செல்லும் பாக்கியம் பெற்ற பெண்களுக்கு சுவனத்தில் யார் கிடைப்பார்கள்........?"
இதுதான் அவர் கேட்ட கேள்வி.
கேள்வி நமக்கு புதிது.
நமக்கு மட்டுமல்ல எமது இந்த ஆய்வில் நாம் சந்தித்த முஸ்லிம்கள் அனைவருக்கும் இந்தக் கேள்வி புதிது.
ஏனெனில், நம்மை படைத்த இறைவனை விசுவாசித்து ,மரணத்தின் பின்னால் உள்ள வாழ்க்கையை அதாவது மறுமையை விசுவாசித்து , மறுமை வாழ்க்கையை விபரித்த நபிமார்களை விசுவாசித்து ,அந்த நபிமார்களுக்கு தூது கொண்டு வந்த வானவர்களை விசுவாசித்து இருக்கின்ற மக்கள் அனைவருக்கும் சுவனத்தைப் பற்றியோ , அதில் இருக்கின்ற ஹூருல் ஈன்களைப் பற்றியோ எதுவித கனவுகளோ அல்லது குழப்பங்களோ இருக்க வில்லை.
அவர்கள் அனைவரின் மனத்திலும் தாங்கள் அனைவரும் மரணத்தின் பின்னால் இறைவனின் சந்நிதியில் ,அவனது ஆதரவில் தங்கி ...தப்பி பிழைத்து இருப்போம் என்கிற ஆறுதல் இருந்தது.
ஆனால், இறைவனின் ஆதரவில் நம்பிக்கை வைக்க தவறிய உலகத்துக்கும் உலகத்து மக்களுக்கும் ஹூருல் ஈன்களைப் பற்றிய இந்தக் கேள்வி புதிதல்ல என்பதை நாம் நமது ஆய்வில் அறிந்துக் கொண்டோம்.
ஆச்சரியமாக அவர்களும் ஏதோ ஒரு விதத்தில் மறுமை வாழ்க்கையை விசுவாசித்து இருந்தார்கள்.
மறு பிறப்பு என்று சிலர் மரணத்தின் பின்னால் உள்ள வாழ்க்கையை நம்பிக் கொண்டிருந்தார்கள்.
அனைத்து ஆசா பாசங்களையும் துறந்து நிர்வான் நிலையை அடைந்துக் கொள்வதில் விமோசனம் இருக்கிறது என்று இன்னும் சிலர் நம்பிக் கொண்டிருந்தார்கள்.
தான் செய்யும் செய்வினைக்கு தக்க பல பிறவிகள் எடுத்து இறுதியில் ஒன்றுமே இல்லாமல் இறைவனுடன் சங்கமமாகி விடுவதாக சிலர் நம்பிக் கொண்டிருந்தார்கள்.
நல்லறங்கள் செய்வதன் காரணமாக இறைவனை தன்னுள்ளேயே கண்டு தனது செய்கைகளை இறைவனின் செயல்களாக கருதி இறைவனுடன் இரண்டறக் கலந்து விடுவதாக இன்னும் சிலர் நம்பிக் கொண்டிருந்தார்கள்.
அவர்களது விசுவாசத்தில் ஒரு குழப்பம்.
அதன் காரணமாக அவர்கள் முஸ்லிம்களின் மறுமை விசுவாசத்தில் குறை கண்டு தங்களது விசுவாசத்தை சரி காணும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கினார்கள்.
எது எப்படி போனாலும் இவ்வாறான அனைத்து நம்பிக்கைகளிலும் மரணத்தின் பின்னால் ஏதோ இருக்கிறது என்று மனித மனம் நம்பிக் கொண்டிருந்தது பேராச்சரியம்.
அத்தகைய நம்பிக்கையில் வாழ்கின்ற அனைவரும் மரணத்தின் பின்னர் இருக்கின்ற வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்கிற நப்பாசையில் தீமை செய்யப் பயந்து தங்களால் முடிந்த வரை நன்மைகளையே செய்து கொண்டிருந்தனர்.
மக்களின் மறுமை வாழ்வு சம்பந்தமான அந்த நம்பிக்கையின் செயல் விளைவு உலகத்துக்கு நன்மையாகவே இருப்பதும் புரிந்தது.
இனி, இணையத்தில் இறைவன் வாக்களித்த மறுமை வாழ்வில் மனிதனுக்கு வழங்கும் சொகுசான , நிம்மதியான வாழ்க்கை சம்பந்தமாக பெரும் வாதப் பிரதி வாதமே நடந்துக் கொண்டிருப்பதை நண்பரின் கேள்விக்கு விடை தேடும் பொழுது புரிந்தது.
எம்மை கொஞ்சம் ஆசுவாசப்படித்துக் கொள்ளவும்,எங்கள் பெண்களின் மன நிலையைப் பற்றி புரிந்துக் கொள்ளவும், எமது அறிஞர் நண்பர்களை சுவனத்து ஹூருல் ஈன் களைப் பற்றி சில நிமிடங்கள் சிந்திக்கவும் வைத்த நண்பர் அன்புராஜுக்கு நன்றிகள்.
நமது நண்பர் அன்புராஜ் இணையத்தில் நடந்துக் கொண்டிருக்கும் சுவையான வாதப் பிரதிவாதங்களை (நிச்சயமாக) பார்த்திருப்பார் என்று நம்புகிறோம்.
ஹூருல் ஈன் களைப் பற்றி நமது நண்பர் நம்மிடம் கேள்வி கேட்டதும் நாம் வழமைப் போல அந்தக் கேள்வியை நமது அறிஞர்களிடம் ஒப்புவித்தோம்.
நமது அறிஞர்களுக்கு உடனே பதில் சொல்லத் தெரிய வில்லை.
ஏனெனில், மக்களில் சிலரைக் குழப்பி தடுமாற வைத்திருக்கும் அழகிய சுவனத்து மங்கையர்கள் பற்றிய கதைகள் அந்த அறிஞர்கள் மனத்தில் நிறைந்து இருக்கவில்லை. அதனால் அந்தக் காரிகைகளைப் பற்றி அவர்கள் அவ்வளவாக அலட்டிக் கொண்டிருக்கவில்லை.
அதே போல , அந்த அறிஞர்கள் சுவனத்துக்கு ஆசை வைத்து நரகத்துக்கு பயந்து இருக்கவும் இல்லை.
அவர்களின் நோக்கமெல்லாம் படைத்த இறைவனின் திருப்தியை எப்படி அடைந்துக் கொள்வது என்பதில்தான் தங்கி இருந்தது என்கின்ற உண்மை எமது கேள்விக்கு அவர்கள் அளித்த பதில்களில் புரிந்துப் போனது.
அவர்களைப் பொறுத்தவரை ஏக வல்ல இறைவனின் திருப்திதான் முதன்மையில் இருந்தது.
வல்ல இறைவனின் திருப்தி எதனை செய்தால் கிட்டும் என்ற ஆராய்ச்சியிலும்,அதன் வழி பிறந்த செய்கைகளிலும் அவர்கள் முழுமூச்சாக ஈடுபாடு கொண்டிருப்பதும் புரிந்தது.
அதனால், அவர்களின் கண்ணோட்டத்தில் சுவனத்தின் சுகங்களும், நரகத்தின் அவலங்களும் இரண்டாம் பட்சத்தில் இருந்தன.
எனவே அவர்களுக்கு இந்தக் கேள்விக்கு பொருத்தமான பதில் சொல்லவும், இது சம்பந்தமாக ஆய்வு செய்யவும் எம்மைப் போலவே நேரம் அவசியப் பட்டது.
இரவில் எனது மனைவியுடன் இருக்கையில் நான் கேட்டேன்"சுவனத்துக்கு செல்லும் ஆண்களுக்கு சுவனத்தின் ஹூருல் ஈன்களில் எழுபத்து இரண்டு பேர்களை மனைவிமார்களாக அல்லாஹ் கொடுப்பானாம்...நீங்கள் என்றாவது சுவனத்தில் பெண்களுக்கு அல்லாஹ் யாரை மணாளனாக கொடுப்பான் என்று சிந்தித்து இருக்கிறீர்களா?"