மிஹ்ராஜ் தினமும் நாங்களும்............
இரண்டு தினங்களுக்கு முன்னர் ஒரு மாலைப் பொழுதில் எமது நண்பர் ஒருவரின் வீட்டுக்கு சென்றோம்.
அவரின் தாயாரும் , அவரது சிறிய தாயாரும் வீட்டு வேலைகளில் மும்முரமாக இருந்தார்கள்.
அவர்களின் முகத்தில் ஒரு பதட்டமும், அதை மீறிய மகிழ்ச்சியும் தெரிந்தது.
நாம் கேட்டோம் "என்ன உம்மா விசேசம்?"
நண்பரின் தாயார் சொன்னார்" நாளை ரஜப் இருபத்து ஏழு!"
எமக்கு ஒன்றும் புரியவில்லை.
"ரஜப் இருபத்து ஏழில் என்ன விசேசம்?"
"அன்று மிஹ்ராஜ் நோன்பு நோற்க வேண்டும்" அவரது குரலில் மகிழ்ச்சி பொங்கி வழிந்தது."அதுக்குத்தான் நாம் தயாராகிக் கொண்டு இருக்கிறோம்"
நாம் நண்பரின் பெயரை கூறிக் கேட்டோம்"அவர் நோன்பு பிடிப்பாரா?"
"இல்லை" அந்தத் தாயார் வருத்தத்துடன் சொன்னார்."அவர்தான் தௌஹீத் ஜமாத்தில் இருக்கிறாரே. அவர் இது 'பிதுஆத்' என்று கூறுகிறார்."
"அப்படியென்றால் வீட்டில் யார் ...யாரெல்லாம் நோன்பு பிடிப்பீர்கள்?" நாம் கேட்டோம்.
"நாங்கள் ..வயசாலிகள் மட்டும்தான்."