அஹ்லுல்பைத் Headline Animator

Thursday, October 3, 2013

தவறாகப் புரிந்துக் கொள்ளப் பட்ட இமாம்......!!! உலமாக்கள் உணர மறுக்கும் உண்மைகள்??? இறுதி அத்தியாம்

தவறாகப் புரிந்துக் கொள்ளப் பட்ட இமாம்......!!! உலமாக்கள் உணர மறுக்கும் உண்மைகள்???

இறுதி அத்தியாம்



மன்சூருடையக் காலத்தில் நிப்சிஸ் சக்கியாவையும்அவரது சகோதரர் இப்ராஹிமையும் காட்டிக் கொடுக்காத காரணத்துக்காக கலீபா மன்சூர் இமாம் ஹசன் பின் அலி ஸலாமுன் அலைஹி அவர்களது சந்ததியினர் அனைவரையும் கைது செய்தார்.

அவர்களுடைய அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்தார்.

கைதுசெய்யப்பட்ட அவர்கள்அனைவரினதும்  கைகளில்,கால்களில்,கழுத்துகளில் சங்கிலிகளைக் கொண்டு விலங்குகளை மாட்டி மதீனாவில் இருந்து ஈராக் கொண்டு சென்று சிறை வைக்கப் பட்டனர்.

சிறைச்சாலைகளில் அவர்கள்மீது சொல்லொனாக்கொடுமைகள் கட்டவிழ்த்து விடப் பட்டன.



உறவினர்களை விடுவிக்கும் நோக்கில் சரணடைந்த நிப்சிஸ் சக்கியாவின் சகோதரர் முஹம்மது பின் இப்ராஹிம் பின் அல் ஹசனை உயிரோடு நிற்கவைத்து சுவர் எழுப்பினர்.

இப்ராஹிம் பின் அப்துல்லாஹ்வின் மாமனாரை நிர்வாணமாக நிற்கவைத்து இருநூற்றம்பது கசையடிகள் கொடுத்தனர்.

பின்னர் அவரைக் கொலை செய்து அவருடைய தலையை வெட்டியெடுத்து குராசான்நகர் முழுதும் வலம் வந்தனர்.

கூடவே சிலர் "இது நிப்சிஸ் சக்கியாவின் தலை" என்று கோஷமிட்டு வந்தனர்.

சிலகாலம் சென்று மன்சூரின் உளவாளிகள் மதீனாவில் நிப்சிஸ் சக்கியாவையும் அவரது நண்பர்களையும் கொலை செய்தனர்.

நண்பர்களின் உடல்கள் மதீனாவில் பொதுமக்களின் பார்வைக்காக மூன்று தினங்கள் தூக்கிலிடப் பட்டிருந்தன.

நிப்சிஸ் சக்கியாவின் தலை துண்டாடப் பட்டு ஊர் ஊராக வலம் கொண்டு வரப் பட்டது.பின்னர் சலப் முனை அருகே இருந்த யூதர்களின் கல்லறையில் அவரது நண்பர்களின் உடல்களுடன் வீசி எறியப் பட்டது.

அப்பாசியர்களின் இத்தகைய செயல் முறைகள் அவர்கள் சம்பந்தமான தவறான கண்ணோட்டத்துக்கு முஸ்லிம் உம்மாவைக் கொண்டு சென்றிருந்தது.

அப்பசியர்களின் தவறுகளுக்கு நியாயம் கற்பிக்கும் நிலையில் முஹம்மத் நிப்சிஸ் சகிய்யாவின் பெயரைக் கெடுக்கும் கைங்கரியத்தை அல் மன்சூர் ஆரம்பித்தார்.

அதனடிப்படையில், அல் மன்சூர் இமாம் ஹசன் பின் அலி ஸலாமுன் அலைஹி அவர்களுக்கு எதிரான கருத்துக்களை தனது ஆட்சி அதிகாரங்களை உபயோகித்து மக்கள்மயப் படுத்தத் துவங்கினார்.

அதில் பிரதானமானது இமாம் அல் ஹசன் பின் அலி ஸலாமுன் அலைஹி பெண்களைத் திருமணம் செய்து விவாக விடுதலை செய்யும் பலவீனமான மனிதர் என்றக் கருத்தாகும்.

அதெப்படி?

'இமாம் ஹசனின் சந்ததியில் வந்ததாகக் கூறும் இந்த முஹம்மத் நிப்சிஸ் சகியின் மூதாதையரான இமாம் ஹசன் ஆட்சி செய்யும் தகுதி இல்லாதவர்.பெண்களை கேளிக்கையாக மணந்து பின்னர் விவாகரத்து செய்யும் பலவீனமான குணம் கொண்டவர்.தனது ஆட்சி அதிகாரத்தை முஆவியாவிடம் பணம் பெற்றுக் கொண்டு விட்டுக் கொடுத்த ஏமாளி.அவர் யாருடனாவது கோபம் கொண்டால் அந்தக் கோபத்தை தனது மனைவி ஒருவரில் காட்டி அந்த அப்பாவிப் பெண்ணை விவாகரத்து செய்யும் குணம் கொண்டவர். மென்மையானவர்.அதனால்,தலைமைத்துவத்துக்கு கொஞ்சமும் பொருத்தம் இல்லாதவர்.ஆகவே,இவ்வாறான குணம் கொண்ட இவரது சந்ததியினர் ஆட்சி அதிகாரத்துக்கு தகுதி இல்லாதவர்கள்.'

அமீர் முஆவியா தனது ஆட்சிக் காலத்தில் அமீருல் மூமினீன் இமாம் அலி ஸலாமுன் அலைஹி அவர்களின் தந்தைக்கும் நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் பெற்றோருக்கும் எதிராக புனைந்து மக்கள் மயப் படுத்திய கதைகள் போன்று அல் மன்சூர் இமாம் ஹசன் பின் அலி ஸலாமுன் அலைஹி அவர்களுக்கு எதிரான கருத்துக்களை மக்கள் மயப் படுத்தத் துவங்கினார்.

சுருங்கச் சொன்னால் அல் மன்சூர் அமீர் முஆவியாவின் பாணியில் -அமீர் முஆவியாவின் ஸுன்னாவை பின்பற்றி அஹ்லுல்பைத் இமாம்களை,அஹ்ளுல்பைத்களின் சந்ததியினரை எதிர்கொண்டார்.

முஸ்லிம் அல்லாத வரலாற்று ஆசிரியர்கள் அல் மன்சூர் மக்கள் மயப்படுத்திய கருத்துக்களால் கவரப் பட்டு இமாம் ஹசன் பின் அலி ஸலாமுன் அலைஹி அவர்கள் சம்பந்தமாக தவறான கருத்துக்களை தமது நூல்களில் பதிவு செய்திருக்கிறார்கள்.

பெண்களைத் திருமணம் செய்து விவாக விடுதலை செய்தக் கதைகள் சரியென்று ஒரு வாதத்துக்கு வைத்துக் கொள்வோம்.

அப்படி ஏற்றுக் கொண்டு அந்த செய்தியை நம்புவதில் இருக்கின்ற நெருடல்களை இனிக் கவனியுங்கள்.

அவர்களின் கூற்றுப் பிரகாரம் இமாம் ஹசன் பின் அலி ஸலாமுன் அலைஹி தனது திருமண செயல்களை அவரது தந்தை கலீபா பதவிக்கு வந்ததன் பின்னர் ஆரம்பித்தாக குறிப்பிடுகிறார்கள்.

அவர்களது குறிப்பின் பிரகாரம் ஹிஜ்ரி 36இல் இருந்து அவரது மரணம் நிகழ்ந்த வருடம் ஹிஜ்ரி 50 க்கும் இடைப்பட்ட பதின்நான்கு வருடங்களுக்குள் அவர் முன்னூறு பெண்களை திருமணம் செய்து விவாக விடுதலை செய்திருக்கிறார்.

அதாவது மாதத்துக்கு இருவர் என்ற அடிப்படையில் திருமணம் செய்து விவாக விடுதலையும் செய்திருக்கிறார்.

அமீருல் மூமினீன் இமாம் அலி ஸலாமுன் அலைஹி கற்றுத் தந்த  ஸுன்னாவின்பிரகாரம் ஒருவருக்கு நான்கு மனைவியரை விட அதிகமாகத் திருமணம் செய்ய முடியாது.

இமாம் ஹசன் பின் அலி ஸலாமுன் அலைஹி இமாம் அலி ஸலாமுன் அலைஹி பதவிக்கு வரும் பொழுது மூன்று பெண்களைத் திருமணம் செய்திருந்தார்.

அந்த மூவரில் இமாம் ஹசன் பின் அலி ஸலாமுன் அலைஹி அவர்களுக்கு நஞ்சூட்டிய மனைவியும் அடங்குவார்.

இமாம் ஒரு பெண்ணை விவாக விடுதலை செய்தால் அந்தப் பெண் இத்தா இருக்கும் காலம் முடியும் வரை பிறிதொரு பெண்ணை மணக்க முடியாது.

அவ்வாறாயின் இமாமினால் வருடத்துக்கு நான்கு பெண்களை மாத்திரமே திருமணம் செய்ய முடியும்.

இமாம் வேறு வேலைகள் எதுவும் செய்யாது திருமணம் மட்டுமே செய்துக் கொண்டு அவரது காலத்தைக் கடத்தினார் என்று கருதினால் கூட, வருடத்துக்கு நால்வர் என்ற வீதத்தில் பதின்நான்கு வருடங்களுக்குள் அவரால் ஐம்பத்தாறு பெண்களை மாத்திரமே திருமணம் செய்திருக்க முடியும்.

சரி......அப்படியே அவர் விவாக விடுதலை செய்யும் பொழுது அவருக்கு விஷம் கொடுத்த அவரது மனைவி ஜூதாபின்த் அல் ஆசாத் தை எதற்காக விவாகரத்து செய்யாமல் விட்டார்? என்று யாராவது கேட்டால் அந்தக் கேள்விக்கு எந்தப் பதிலும் இன்றுவரை இல்லை என்பதே பதிலாகும்.

அமீருல் மூமினீன் இமாம் அலி ஸலாமுன் அலைஹி இமாம் ஹசன் ஸலாமுன் அலைஹி அவர்கள் சம்பந்தமாக குறிப்பிடும் பொழுது "இமாம் ஹசன் உருவத்திலும் செயல்களிலும் நபி சல்லல்லாஹு அலைஹி  வஆலிஹி வசல்லம் அவர்களை ஒத்திருந்ததாக குறிப்பிடுகிறார்.

அது எவ்வகையான ஒப்பீடு?

நாம் அவதானித்த வரலாற்றுக் கதைகள் சொல்லுவது போல இமாம் ஹசன் ஸலாமுன் அலைஹி தீவிரமான முறையில் திருமணம் செய்து அதே மாதிரி விவாகரத்து செய்தக் கதை உண்மையாக இருந்தால் நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களும் அவ்வாறே இருந்திருப்பார்கள்.

ஆனால், நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவ்வாறு இருக்க வில்லை.

ஆகவே, இமாமும் அவ்வாறு இருந்திருக்கப் போவதில்லை.

உருவ ஒற்றுமையில் ஒரே மாதிரி இருந்திருப்பார்கள்.

அதேபோன்று அழகான நடத்தைகளிலும் நற்குணங்களிலும் அவர் நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்ளை ஒத்திருந்தார்கள்.

அக்காலத்தில் இருந்த மக்களிலே இமாம் ஹசன் பின் அலி ஸலாமுன் அலைஹி அவர்களது நற்குணத்திற்கு ஈடாக இன்னொருவர் இருக்கவில்லை.

ஒரு முறை பனு உமையாக்களின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவர் இமாம் ஹசன் பின் அலி ஸலாமுன் அலைஹி அவர்களைக் காண்கிறார்.

அவர் தனக்கு அருகில் இருந்தவர்களிடம் "மக்கள் புடை சூழ இருக்கும் இந்த மனிதர் யார்?" என்று கேட்கிறார்.

"அவர் இமாம் ஹசன்!" என்று அவருக்கு சொல்லப் படுகிறது.

உடனே அவர் இமாமின் முன்னால் வந்து "அல்லாஹ்வின் சாபம் உங்கள் மீதும் உங்களது தந்தை மீதும் உண்டாகட்டும்" என்று சபிக்கிறார்.

தன் மீதும் தனது தந்தையின் மீதும் சாபமிடும் அந்த மனிதனை அன்புடன் நோக்கிய இமாம் "ஏ...மனிதனே......நீ இந்த நகரத்துக்கு புதியவனாக இருக்கிறாய்.உனக்கு இங்கே யாரையும் அறியாமல் இருந்தால் நீ எனது விருந்தாளியாக எனது வீட்டுக்கு வா.........நீ உணவின்றி பசித்திருந்தால் நான் உனக்கு உணவளிக்கிறேன்.........உனக்கு தாகமாக இருந்தால் நான் உனது தாகத்தை தணிக்கிறேன்....உனக்கு துணையாக யாரும் இல்லையென்றால் நீ இந்த நகரத்தை விட்டும் போகும் வரை நான் உனக்கு துனையிருக்கிறேன்" என்று சொன்னார்கள்.

இமாமின் பதிலைக் கேட்டு அம்மனிதன் அதிர்ந்துப் போனான்.

"நான் உங்களையும் உங்களது தந்தையையும் சபித்ததன் பிறகு நீங்கள் எனக்கு சொல்லும் பதில் இதுதானா?" என்று அவன் குழப்பத்துடன் கேட்டான்.

"ஆம்..."என்ற இமாம் அவனை நோக்கி "நீ தவறான கருத்துக்களினால் கருத்துரைக்கப் பட்டிருக்கிறாய்.சந்தேகத்தில் இருக்கும் உனது செய்கையில்
நான் தவறு காணவில்லை. எனது தந்தை சம்பந்தமாக நீ தவறாக கருதிக் கொண்டிருக்கிறாய். அதனைத் தவிர வேறொன்றும் இல்லை." என்றார்கள்.
உடனே அந்த மனிதன் "அல்லாஹ்வின் மீதாணையாக அல்லாஹ்வின் உதவி உங்கள் மீதே இருக்கும்" என்று சொன்னான்.

 இமாமின் வீட்டுப் பணிப்பெண் இமாமின் நற்குணங்களை இப்படி சொன்னாள்"நான் இமாமிடம் நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களைத் தவிர இன்னொருவரைக் காணவில்லை."

மகோன்னதம் பொருந்திய இமாமின் மகத்துவத்தையும் கண்ணியத்தையும் இந்த கட்டுரையில் முழுமையாக கொண்டு வர முடியாமைக்கு வருந்துகிறேன்.

என்றாலும், இமாம் சம்பந்தமாக நமது உலமாக்கள் தவறாகக் கருதிக் கொண்டிருக்கும் சில தப்பான கதைகளுக்குரிய சரியான விளக்கத்தை இந்தத் தேடல்கள் ஓரளவு நிவர்த்தி செய்து நிற்கும் என்று நம்புகிறேன்.

நாம் இதன் பின்னர் வரும் ரமழான் மாதங்களில் ஓரிரவில் நாம் எமது பிரார்த்தனையில் இமாம் ஹசன் பின் அலி ஸலாமுன் அலைஹி அவர்களை நன்றியுடன் நினைவு படுத்துவோமாக.

........நிறைவு.......




3 comments:

Kalmunai Khaleel Rahman said...

அல்ஹம்துலில்லாஹ். மிகவும் ஆழமான ஆய்வு. கற்றறிந்த(?) நமது உலமாகப் பெருந்தகைகள் இனியாவது அஹ்லுல்பைத் விடயத்தில் குறிப்பாக இமாம் ஹஸன் ஸலாமுன் அலைஹி அவர்கள் சம்பந்தமாக வாய் திறக்கும்போது புரிந்து கொண்டு செயற்படுவார்கள் என்று நம்புவோமாக!
மாஷா அல்லாஹ். வாசகர்களாகிய எங்களுக்கு இதுபற்றிய பூரண அறிவை வழங்கிய உங்கள் முயற்சிக்கு அல்லாஹவினதும்; அவனது அஹ்லுல் பைத்தினரதும் கருணையும் கிருபையும் கிடைக்க பிரார்த்திக்கின்றோம்.

Muhammad Ali said...

Salaam Alaikum Brother,
Masha Allah... I pray to Allah to give you more health and wealth to write about Ahlulbaith. Allahumma Salli Ala Muhammad Wa Aali Muhammad.

Kalmunai Khaleel Rahman said...

மிகவும் பயனள்ள அரிய தகவல்களை வாசகர்களாகிய எமக்காக வழங்கிய உங்களுக்கு என்றும் எமது நன்றிகள்.
ஜஸாகல்லாஹு ஹைரா

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad