இறைவனை அறிந்துக் கொள்ளும் ஆவலில் தவிக்கின்ற நண்பர் அன்புராஜை அல்லது இறைவனை விசுவாசிக்கின்ற கோடானு கோடி மக்களை காபிர்கள் என்ற வரையறையினுள் எந்தக் கொம்பனாலும் கொண்டு நிறுத்த அல்லது வரையறுக்க முடியாது.
ஏனெனில்,ஒரு மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையேயான தொடர்புகளை யாராலும் கணித்து கூற முடியாது.
இறைவனைப் பொருத்தவரை அவனை நிராகரிப்பவர்களே காபிர்களாகும்.
அராபிய கோத்திர கலாச்சாரங்களை இஸ்லாம் என்று கருதுவது சுத்த அறிவீனம்.
அல்லாஹ்வும் அவனது தூதர் முகம்மதுவும் நமக்கு சொன்ன இஸ்லாம் அவரது மறைவுக்குப் பின்னரான அராபியாவிலோ அல்லது இன்றைய அராபியாவிலோ இல்லை.
அதற்குக் காரணமானவர்களாக ஜக்கூம் மரத்தின் நாயகர்களான பனு உமையாக்களும் அவர்களுக்குப் பின்னரான அப்பாஸிய ஆட்சியாளர்களும் அவர்களது அடிவருடிகளும் இன்னமும் இருந்துக் கொண்டிருக்கிறார்கள்.
இஸ்லாம் மார்க்கத்தை வேரறுத்த கயவர்களை அப்பாவி முஸ்லிம் மக்களிடையே இனம் காட்ட வேண்டும் என்ற நோக்கத்திலேயே நாம் அஹ்லுல்பைத் தமிழ்த் தளத்தை ஆரம்பித்தோம்.
அல்லாஹ்வின் அருளினால் இலங்கையில் பல இஸ்லாமிய அறிஞர்கள் நாம் முன்வைக்கின்ற கருத்துக்களுடன் உடன்பட்டிருக்கிறார்கள்.
எங்களது பயணத்தில் நண்பர் அன்புராஜின் குறுக்கீடு எங்களை சரியான திக்கில் இலக்கிட்டது.
அவரது அனைத்து கருத்துக்களையும் ஆய்வு செய்கின்ற ஆய்வில் இஸ்லாத்தின் புனிதம் காக்கும் செய்கை செயலுருவானது.
அவரது தொடர்பை அல்லாஹ் நம்மை நெறிப் படுத்துவதற்கு ஏற்படுத்திய தொடர்பாகவே நாம் கருதினோம்.
அதற்கு எங்களது நெஞ்சு நிறைந்த நன்றிகள் அவருக்கு என்றுமிருக்கிறது.
ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரம் தூதுவர்களை மனித குலத்தை நெறிப்படுத்த இறைவன் அனுப்பியதாக இஸ்லாம் சொல்கிறது.
ஆகவே,மனிதர்கள் இன்று பின்பற்றுகின்ற மதங்கள் சில சமயம் அந்த தூதர்களில் ஒருவருக்கு அருளப்பட்டதாக இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
இந்த நிலையில் இறைவனை அறிந்துக் கொள்ள தடையாக இருந்த ஜக்கூம் மரத்தின் சொந்தக்காரர்களைத் தவிர வழித் தவறிய மக்கள் வேறு யார்தான் இருக்க முடியும்?
இஸ்லாத்தில் 'பத்ரத் 'உடைய காலம் என்பது அல்லாஹ்வை அறியாத அல்லது இறைவனை அறியாத காலம் என்று பொருள் படுகிறது.
அல்லாஹ்வை அறியாத மக்கள் அனைவரையும் இஸ்லாம் 'பத்ரதுடைய' காலத்தில் வாழுகின்ற மக்களாக கருதி அவர்களது அறியாமையின் காரணமாக மறுமை வாழ்வில் வெற்றியை வழங்கி அவர்களை சுவனத்துக்கு உரியவர்களாக கருதுகிறது.
அந்தமான் தீவு போன்ற அறிவியல் அறிவு எட்டிப் பார்க்காத இடங்களில் வாழுகின்ற அப்பாவி மக்களும்,அறிவியல் அறிவின் உச்சத்தை தொட்டு விட்டோம் என்று வேலைப் பளுகளின் மத்தியில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் அமெரிக்க ,ஐரோப்பிய மக்களும் , எங்கள் தெருக் கோடியில் புத்தர் சிலையை பக்தியுடன் வணங்கிக் கொண்டிருக்கும் ஏழைக் குடியானவனும்,எமது அலுவலகத்துக்குப் பக்கத்தில் இருக்கும் அனுமார் கோவிலில் மணி அடித்து அனுமாரிடம் தனது தேவையை முறையிட்டுக் கொண்டிருக்கின்ற வயதான அம்மாவும் மறுமையில் 'பத்ரதுடைய'நிலைமையில் இருக்கின்ற காரணத்தினால் சுவனம் செல்லுவது உறுதி.
இறைவனின் நீதி அன்புராஜ் நம்பும் அராபிய கோத்திர நீதி போன்றதல்ல.
உலகத்தில் முதல் மனிதர் நபி ஆதம் (அலை) அவர்கள் காலந்தொட்டு உலக இறுதி நாள்வரை இருக்கின்ற மனிதர்கள் அனைவரும் ஒரு இடத்தில் கூடி நின்று தமது அத்தனைத் தேவைகளையும் வேண்டி நின்று அவர்களின் அத்தனைத் தேவைகளையும் இறைவன் நிவர்த்தி செய்ததன் பின்னரும் அவனது கஜானாவில் இருந்து ஒரு கொசுவின் இறக்கையின் அளவு கூடக் குறைவதில்லை.
உலகத்தின் அனைத்து மக்களையும் சுவனத்தில் புக செய்தாலும் இறைவனின் ஆட்சியில் அல்லது அவனது கஜானாவில் எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை.
அதே போன்று உலக மக்களின் தேவைகளை மறுப்பதன் மூலம் அல்லது அந்த மக்களை நரகத்தில் வேதனை செய்வதன் காரணமாக இறைவனுக்கு எந்த ஆதாயமும் கிடைப்பதும் இல்லை.
இதுதான் சத்தியம்.
நிலைமை இப்படி இருக்க இறைவனுக்கு எந்த விதமான தீங்கும் நினைக்காத ஒரு இந்துவை,ஒரு பௌத்தனை, அந்தமான் தீவின் அப்பாவி குடி மகனை,ஒரு அமெரிக்கனை அல்லது ஐரோப்பாவின் அப்பாவி குடிமகனை அப்பாவி இந்திய இந்துக்களை அல்லாஹ் மறுமையில் நரகத்தில் போட்டு வேதனை செய்ய என்ன தேவை இருக்கிறது?
நான் அறிந்த இஸ்லாம் .......முகம்மதுநபி சொன்ன இஸ்லாம் இதுதான்.
நபிகளாரின் மறைவிற்குப் பின்னர் ஜக்கூம்மர நாயகர்கள் முஹம்மது நபி அவர்களுக்கும் அவர் சொல்லித் தந்த இஸ்லாத்துக்கும் எதிராக கிளப்பி விட்டிருக்கும் அவதூறுகளை யாராகிலும் ஒருவர் விசுவாசித்துக் குழம்பிப் போனால் அதற்கு நம்மால் என்ன செய்ய முடியும்.
எது எப்படிப் போனாலும் அன்புராஜை நாம் கௌரவத்துடன் மதிக்கிறோம்.
அன்புராஜின் நட்பு நமக்கு என்றும் தேவை.
அன்புராஜின் நட்பு நமக்கு என்றும் தேவை.
நமது "காபிர்.....விளக்கம்" பதிவு அன்புராஜின் மனத்தை நோவித்திருந்தால் எம்மை பெரு மனம் கொண்டு மன்னித்து விடுங்கள்.
1 comment:
தவறு சரி என்பதையெல்லாம் இறைவனே தீர்மானிக்கட்டும்.
அரேபிய கலாச்சார சகதியில் சிக்கிய வண்டி போன்றதுதான் முஸ்லீம்களின் உள்ளம்.தாங்களும் அதற்கு விதிவிலக்கு அல்ல.பிற கலாச்சார குழுக்களில் சிறப்புள்ளதுஎன்று நீங்கள் சொன்ன மறுகணம் தங்களையும் காபீர் என்றுச் சொல்லி .......... கொடுமைகள் கூட அரங்கேரலாம். கடவுளை அரேபியனாக்கி வைத்திருக்கும் ஒருவரும் இறைவனை அனைத்து உலகங்களிலும் காணும் கொள்கையை உடைய இந்துவும் ஒருபோதும் இணைந்து இருக்க இயலாது. தங்களிடம் நான் ஒரு வேடிக்கையாகவே தொடர்பு கொண்டேன். நான் நினைத்ததுபோலவே என்னையும் ஒரு காபீர் என்று அரபு மொழியில் காட்டுமிராண்டி ...... என்று எல்லா முஸலீம்களும் சொல்லிக்கொண்டிருப்பதுபோல் தாங்களும் திட்டி விட்டீர்கள். இனி உங்கள் வழியில் தாங்கள் செல்ல வேண்டும்.என் வழியில் நான் செல்கின்றேன். நமக்குள் எந்த நட்பும் உறவும் தேவையற்றது. கடவுளை வழிபடாத நாத்தீகன் கூட ” சத்தியவிரதம் ஒழுக்கம் மனித நேயம் கொண்டவன் என்றால் இறைவனின் அருள் கொடை என்றும் அவனுக்கு உண்டு ” என்பது இந்தியாவின் 10000
ஆண்டு அனுபவ பாடம்.நான் அதை நம்புகின்றேன். அரேபிய கடவுள் உங்களை காக்கவேண்டும்.அவரது நல்லாசிகள் என்றும் தங்களுக்கு கிடைக்க வேண்டும்.
இதோடு முடித்துக் கொள்வோம்.நண்பர்களாகவே பிரிந்து செல்கின்றேன். என்னிடம் பகையில்லை. வாழ்க வளமுடன். எற்கனவே unsubscribe செய்து விட்டேன். எனக்கு தங்களின் E-mail வராது.இனிமேல்வர வேண்டாம்.
Post a Comment