அத்தியாயம் நான்கு....
கர்பலா கொலைக் களத்தில் இமாம் ஹுசைன் ஸலாமுன் அலைஹி அவர்களும் அவர்களது குடுபத்தவர்கள் அனைவரும் கொடூரமாக படு கொலை செய்யப் பட்டதன் பின்னர் உமையாக்களின் அராஜகங்களை பொறுத்துக் கொள்ள முடியாமல் மக்கள் அவர்களுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து புரட்சி செய்யத் துவங்குகிறார்கள்.
இதில் நபிக் குடும்பத்தவர்கள் உமையாக்களினால் நேரடியாக பாதிக்கப் பட்டிருந்தக் காரணத்தினால் மக்களின் பேராதரவு நபிக் குடும்பத்தின் அங்கத்தவர்கள் மீதிருந்தது உண்மையே.
இமாம் ஹுசைன் ஸலாமுன் அலைஹி அவர்களது மகன் இமாம் ஜைனுல் ஆப்தீன் ஸலாமுன் அலைஹி அவர்களுக்கு இரண்டு புதல்வர்கள்.
ஒருவர் இமாம் பாகிர் ஸலாமுன் அலைஹி.
அடுத்தவர் இமாம் ஜைத் ஸலாமுன் அலைஹி.
இந்த இரண்டு இமாம்களும் அவர்களது குடும்பத்தினரும் மாற்றம் கண்டு நலிந்துப் போய்க் கொண்டிருந்த இஸ்லாம் மார்க்கத்தையும் நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களது ஸுன்னாவையும் உலகத்தில் நிலை நிறுத்தும் பணியில் மும்முரமாக இருந்தனர்.
திடீரென இமாம் ஜைத் ஸலாமுன் அலைஹி பலவந்தமாக பனு உமையாக்களுடன் மோத வேண்டிய துரதிர்ஷ்ட நிலையொன்று உருவாகிறது.
உமையாக்களில் ஹிஷாம் பின் அப்துல் மலிக் பதவியேற்றதும் அவன் அவனது முன்னோர்களை விஞ்சும் விதமாக மிகவும் அட்டூழியங்கள் செய்யத் துவங்கினான்.
குறிப்பாக பனு ஹாஷிம்களுடன் மிகக் கடுமையாக நடந்துக் கொண்டான்.
அவனது அராஜகங்களையும்,அட்டூழியங்களையும் சகித்துக் கொள்ள முடியாத நிலையில் இமாம் ஜைத் ஸலாமுன் அலைஹி அவனை நேரடியாக கண்டுக் கதைத்து பனு ஹாஷிம்களுக்கு எதிராக அவர்கள் முன்னெடுக்கும் அநியாயங்களை தடுக்கும் நோக்கத்துடன் அவனது அரண்மனைக்கு போகிறார்.
அக்காலத்தில் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப் பட்ட மிகப் பெரிய மார்க்க அறிஞரும் போதகருமான இமாம் ஜைத் ஸலாமுன் அலைஹி ஹிஷாம் பின் அப்துல் மலிக்கின் அரண்மனைக்குச் சென்றதும் நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களது நேரடி வம்சத்தின் வழி வந்த அந்த இமாமுக்குரிய மரியாதையைக் கொடுக்காமல் மிகவும் தரம் தாழ்ந்த இழிவான வார்த்தைகளைக் கொண்டு தூசித்து அவமானப் படுத்தத் துவங்கினான்.
அது மட்டுமன்றி இமாமின் வேண்டுகோளை கடுமையாக மறுத்து விடுகிறான்.
மன்னனது நடவடிக்கையால் நொந்துப் போன இமாம் ஜைத் ஸலாமுன் அலைஹி சிரியாவில் இருந்து கூபாவுக்கு பயணமாகிறார்கள்.
கூபாவிலே தனது ஆதரவாளர்களைக் கொண்டு சிறிய படையணி ஒன்றை திரட்டிய இமாம் அவர்கள் அநீதமான பனு உமையாக்களின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்யத் துவங்குகிறார்.
மெது மெதுவாக அவர் அதில் வெற்றியும் கண்டு வந்தார்.
இமாமின் தலைமையில் கூபா மக்கள் சுமார் நான்கு வருடங்களுக்கும் மேலாக உமையாக்களின் ஆட்சிக்கு கட்டுப் படாமல் இருந்திருக்கும் செய்தி அவரது வெற்றிக்கு போதுமான அத்தாட்சியாகும்.
மெது மெதுவாக வளர்ச்சி காணும் இமாமின் மக்கள் ஆதரவு பனு உமையாக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.
அதன் பின்னர் இமாமின் வளர்ச்சியை பூண்டோடு ஒடுக்குவதற்கு உமையாக்கள் திட்டம் தீட்டுகின்றனர்.
அவர்களின் திட்டப் பிரகாரம் ஈராக்கில் உமையா கவர்னராக இருந்த யூஸுப் பின் உமர் அல் தகாபி தலைமையில் மிகப் பெரும் படைகளைத் திரட்டி அனுப்பி வைக்கிறார்கள்.
அந்தக் கொடூரமான கவர்னர் கூபாவுக்கு வந்து இமாம் ஜைத் ஸலாமுன் அலைஹி அவர்களின் சிறிய படையை சுற்றி வளைக்கிறான்.
இஸ்லாமிய வரலாற்றில் இன்னுமொரு கர்பலா நாடகம் அரங்கேறத் துவங்குகிறது.
யுஸுபின்படையினரை எதிர்கொண்ட தருணத்தில் இமாம் பாடிய ஒரு யுத்தக் கவிதையொன்று இன்றுவரை சாகாவரம் பெற்றுள்ளது.
"இழிவான வாழ்க்கை மற்றும் கௌரவமான மரணம் இரண்டும் இரு கசப்பான இனிப்பு பலகாரங்களாகும்.இந்த இரண்டில் ஒன்றைத் தெரிவு செய்யுமாறு என்னிடம் வேண்டி நின்றால் நான் கௌரவமான மரணத்தையே தேர்வு செய்வேன்"
அந்த யுத்தத்தில் இமாமவர்கள் மிகவும் துணிச்சலாக போரிட்டார்கள்.
இமாமின் வயது அப்பொழுது நாற்பத்து இரண்டு.
இறுதியில் இமாம் வீர மரணம் எய்துகிறார்கள். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜி ஊன்.) இந்த சம்பவம் ஹிஜ்ரி 120 அல்லது 122இல் நடைபெற்றதாக குறிப்பிடப் பட்டிருக்கின்றது.
இமாம் கொல்லப் பட்டவுடன் கவர்னர் யுஸுபின்மகன் யஹ்யா என்பவர் இமாமின் பூதவுடலை யாரும் அறியா வண்ணம் யுத்தக் களத்திலிருந்து கொண்டு சென்று யுபிரடீஸ் நதிக் கரையில் அடக்கம் செய்கிறார்.
எனினும் யூஸுபின் கட்டளைப் பிரகாரம் படை வீரர்கள் புனித உடலைத் தேடும் படலத்தை ஆரம்பிக்கிறார்கள்.
இறுதியில் கண்டு பிடித்தும் விடுகிறார்கள்.
மண்ணறை தோண்டி உடல் வெளியே எடுக்கப் படுகிறது.
வெளியே எடுக்கப் பட்ட புனித உடலில் இருந்து இமாம் ஜைத் ஸலாமுன் அலைஹி அவர்களது தலை துண்டாடப் படுகிறது.
பனு உமையாக்களின் யுத்த கலாச்சார ஸுன்னா பிரகாரம் துண்டாடிய தலையை கவர்னர் யூஸுப் சிரியாவிற்கு ஹிஷாம் பின் அப்துல் மலிகின் அரண்மனைக்கு அனுப்பி வைக்கிறான்.
ஹிஷாமின் கட்டளைப் பிரகாரம் நிர்வாணமாக்கப் பட்ட இமாமின் புனித பூதவுடல் தூக்கு மேடையில் மக்கள் பார்வைக்கு காட்சியாக வைக்கப் படுகிறது.
சுமார் நான்கு வருடங்கள் இமாமின் பூதவுடல் தூக்கு மேடையிலேயே அநாதரவாக வைக்கப் பட்டிருந்தது மிகவும் வேதனையான செய்தியாகும்.
இந்நிலை உமையாக்களின் கலீபாவாக வலீத் இப்னு யஸீத் இப்னு அப்துல் மலிக் இப்னு மர்வான் பதவிக்கு வரும் வரை தொடர்ந்திருந்தது.
புதிய மன்னனின் கட்டளைப் பிரகாரம் நான்கு வருடங்களாக தூக்கு மேடையில் சிதைவடைந்து போய் இருந்த இமாமின் எலும்புகளும் மிச்சங்களும் கீழிறக்கப் பட்டு எரிக்கப் பட்டு , எஞ்சிய சாம்பல் காற்றில் தூவி காற்றுடன் கலந்து விடப் படுகிறது.
இந்த அநியாயம் நடந்து ஒரு தசாப்தத்துக்குள் உமையாக்களின் ஆட்சி முடிவுக்குவருகிறது.
நபிக் குடும்பத்துக்கு எதிராக கர்பலாவில் இருந்து பகிரங்கமாக துவக்கப் பட்ட இத்தகைய கொடூரமான செயல்களின் செயல் விளைவுகள் உலக முஸ்லிம்களை நபிக் குடும்பத்துக்கு தமது பூரணமான ஆதரவை வழங்கும் நிலைக்கு ஆளாக்கியது.
இவ்வாறான ஆதரவின் முழுமையான பங்கினை உலகின் பல பாகங்களுக்கும் அகதிகளாக சென்றிருந்த அப்பாஸியகுடும்பத்தினர் மிகவும் சூட்சுமமாக தமக்கேற்றவாறு மாற்றியமைத்துக் கொண்டனர்.
அது எப்படி என்பதை அடுத்த பதிவில் கவனிப்போம்.
3 comments:
அறியாத எத்னையோ விடயங்கள் புதிது புதிதாக வந்து கொண்டிருக்கின்றன. தொடரட்டும் உங்கள் ஆய்வுகளும் வெளியீடுகளும்
அன்பில்லாத ஒரு சமூகம்
புதிய மன்னனின் கட்டளைப் பிரகாரம் நான்கு வருடங்களாக தூக்கு மேடையில் சிதைவடைந்து போய் இருந்த இமாமின் எலும்புகளும் மிச்சங்களும் கீழிறக்கப் பட்டு எரிக்கப் பட்டு , எஞ்சிய சாம்பல் காற்றில் தூவி காற்றுடன் கலந்து விடப் படுகிறது.
பிணங்களை எரிப்பது அரேபியாவில் கூடுமோ ?
மேற்படி இமாம் இந்துவாக மதம் மாற்றிவிட்டார்களோ?
இவ்வளவு கொடுமையான வரலாறுகளை படிப்பவன் 1 கோழையாக மாறுவான் 2.துஷ்டனாக மாறுவான்.
Post a Comment