இந்த ரமளானில், சில நாள்களாக எம்முடைய வீட்டில் நபி (ஸல்) அவர்களின் பெற்றோர்கள் சுவனவாசிகள் என்கிற கருத்தில் அடிக்கடி உரையாடல்கள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன.
நம்முடைய சில நண்பர்கள் தவ்ஹீத் ஜமாஅத் கருத்துக்களினால் ஆளுமை கொள்ளப் பட்டு இருந்தார்கள்.
அவர்கள் ஸஹிஹ் முஸ்லிமில் இருக்கின்ற நபி (ஸல்) அவர்களது பெற்றோரின் இறை மறுப்பு நிலை சம்பந்தமான சில ஹதீஸ்களை எதுவித மறுப்புமின்றி ஏற்றுக் கொண்டிருந்ததனால், மறுமை நாளில் நபி (ஸல்) அவர்களது பெற்றோர்களின் நிலை சம்பந்தமாக நேர் மறை கருத்தியலில் இருந்தார்கள்.
அத்தகைய அனைத்து ஹதீஸ்களும் அல் குர்ஆனுக்கு முற்றிலும் முரணானவை என்பது நமது வாதம்.
இந்த நிலையில் நமது நண்பர் ஒருவர் நேற்று முன்தினம் எங்களது வீட்டுக்கு அவரது குடும்பத்தவர்கள் சகிதம் வந்தார்.
வழமைப் போல நமது பேச்சு அஹ்ளுல்பைத்களின் பக்கம் திரும்பியது.
அந்த உரையாடல் கொஞ்ச நேரத்தில் நபி (ஸல்) அவர்களின் பெற்றோர்களின்
மறுமை நிலை சம்பந்தமாக திசை மாறியது.
நண்பர் அவரது நம்பிக்கையின் நிலையை வலியுரித்தினார்.
நாம் நமது தரப்பு ஆதாரங்களை எடுத்து வைத்தோம்.
நாம் இருவரும் ஒருமித்த ஒரு முடிவுக்கு வந்தபாடில்லை.
ஏனெனில், நாம் நெறி பிறழ்ந்த இஸ்லாமிய ஆட்சியாளர்களின் அடாவடித்தனத்தை சொல்ல, நண்பரோ அந்த ஆட்சியாளர்களின் தவறுகளுக்கான சமாதானங்களை சொல்லிக் கொண்டு இருந்தார்.
திடீரென நண்பரின் எட்டு வயது மகள் எங்களது உரையாடலுக்கு குறுக்கே வந்தாள்.
அவள் அவளுக்கே உரிய குறும்புடன் "எக்ஸ் கியுஸ் மீ.......நான் கொஞ்சம் பேசவா?" என்றாள்.
அவளது குறுக்கீட்டை விரும்பாத நண்பர்'நாம் பேசும் விடயம் சம்பந்தமாக இவளுக்கு என்ன தெரியும்...' என்பது போல அவளைப் பார்த்தார்.
அவள் நண்பரின் மகள் அல்லவா?
ஆகவே ,எம்மைப் பொறுத்தவரை அவள் நமது விருந்தாளி.
நாம் நமது நண்பருக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்துக்கு அவள் உரிமை உள்ளவள்.
நண்பர் அவளை அலட்சியப் படுத்தினாலும் நம்மால் அது முடியாது.
நாம் பேசுமாறு அவளை உற்சாகப் படுத்தினோம்.
அவள் பொதுவாக எங்கள் இருவரிடமும் "மறுமை நாளில் ஒரு 'ஹாபிஸின்' (அல் குர்ஆனை முழுவதும் மனணமிட்டவர்) நிலை என்ன?" என்று கேட்டாள்.
அவளது கேள்வியில் தொக்கியிருந்த விடையை அறிந்து நாம் உட்சாகமானோம்.
நண்பர் மெலிதாக விறைப்பது தெரிந்தது.
ஏனெனில், அந்தக் கேள்வியில் உள்ள பதில் அவரை வியர்க்க வைக்கும் என்று அவருக்கு புரிந்ததோ...என்னவோ..?
"எதற்காக அதைக் கேட்கிறீர்கள்?" நண்பர் தனது மகளிடம் திருப்பிக் கேட்டார்.
அந்த மழலை வெகுளியாக"எங்களுடைய ஹசரத் எங்களுக்கு குர்ஆனை மனப் பாடம் செய்ய சொன்னார்." என்ற அவள் தொடர்ந்து "மறுமையில் ஒரு ஹாபிஸுக்கு அவரது பெற்றோர்கள் உட்பட எழுபது பேர்களை சொர்க்கத்துக்கு எதுவித கேள்வி கணக்கும் இல்லாமல் கொண்டு செல்ல அல்லாஹ் அனுமதிப்பானாம்......அப்படி என்றால் அல் குர்ஆனை நமக்கு சொல்லித் தந்த நபியின் உம்மா...வாப்பா சொர்க்கம்தானே?" என்று எம்மிடம் திருப்பி கேட்டாள்.
தனது மழலையின் கேள்விக்கு நண்பர் விக்கித்துப் போனார்.
ஏன்....நாமும்தான்.
குழந்தைகளின் உள்ளத்தில் ஒரு களங்கமும் இல்லை.
அவர்கள் பெரியவர்கள் ஆகும் பொழுது நாம்தான் அவர்களின் உள்ளத்தை களங்கப் படுத்துகிறோம்.
அவ்வளவுதான்.
No comments:
Post a Comment