தவறாகப் புரிந்துக் கொள்ளப் பட்ட இமாம்.............??? உலமாக்கள் உணர மறுக்கும் உண்மைகள்!!!.
அத்தியாயம் ஒன்று...
அத்தியாயம் ஒன்று...
சில தினங்களுக்கு முன்னர் என்னுடைய அலுவலகத்துக்கு உடுகொடை என்ற ஊரிலே இருக்கின்ற மிகவும் பழமையும் பிரபல்யமுமான 'மதரசா'வின் பணிப்பாளர் தரத்திலிருக்கும் இரண்டு உலமாக்கள் வருகை தந்தார்கள்.
பளீரென்ற வெள்ளை ஜுப்பா அணிந்திருந்த அவர்கள் மிகவும் வசீகரமாகத் தோற்றம் கொண்டிருந்தார்கள்.
நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களது அருமைப் பெற்றோர் அப்துல்லாஹ் அலைஹிஸ்ஸலாம் ஆமினா அலைஹா ஸலாம் ஆகியோர் சம்பந்தமான எனது நூல் சம்பந்தமாக என்னுடன் பேச வந்ததாக கூறினார்கள்.
மிக்க மகிழ்ச்சி கொண்ட நான் மகிழ்வுடன் சில நூல்களை அவர்களுக்கு வழங்கினேன்.
மூத்த உலமா என்னுடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது இளையவர் நூலை அவசர அவசரமாக புரட்டி எதையோ தேடுவது புரிந்தது.
சட்டென்று ஓரிடத்தில் தரித்த அவர் மூத்தவரிடம் இரகசியமாக அவர் தேடி எடுத்த இடத்தைக் காட்டினார்.
அவர்களது நடவடிக்கை கொஞ்சம் விநோதமாகத் தெரிந்தது.
எனக்கு சங்கடமாக இருந்தது.
'ஹ்ம் ....'என்றவாறு அவ்விடத்தைக் கவனித்த மூத்த உலமா என்னை நோக்கி "உங்களது புத்தகத்தில் இவ்விடத்தில் நீங்கள் ஹசரத் முஆவியா (ரலி) அவர்கள் சம்பந்தமாக குறிப்பிட்டிருக்கும் விதம் தவறானது " என்றார்.
அலுவலகத்தில் என்னுடன் இருந்த எனது நண்பர் ஒருவர் "அதென்னது?" என்று அந்த உலமாவிடம் கேட்டார்.
"அமீர் முஆவியா தனது இழிபிறப்பு இரகசியத்தை மறைப்பதற்காக அஹ்ளுல்பைத்கள் சம்பந்தமான தவறான கருத்துக்களை மக்கள் மயப் படுத்தினார் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்.அவரது பிறப்பு இழி பிறப்பு என்று கூறுவது தவறாகும்" என்றார்.
"ஹசரத் ....வரலாற்று ஆவணங்கள் அவ்வாறு பேசுகின்றன........அதனைத்தான் நான் குறிப்பிட்டேன்.வித்தியாசமாக வேறொன்றும் நான் சொல்லவில்லை." என்று நான் அவருக்கு பதிலுருத்தேன்.
"அப்படி இல்லை...." என்ற மூத்த உலமா குரலில் கொஞ்சம் கடுமையை வரவழைத்துக் கொண்டு இப்படித் தொடர்ந்தார்."ஹசரத் முஆவியா (ரலி) அவர்களின் தாயார் ஹிந்தா (ரலி) இஸ்லாத்தை ஏற்ற சஹாபா பெண்மணி.உங்கள் கூற்று அவரது கண்ணியத்தை கேள்விக்குறியாக்குகிறது." என்றவர் தொடர்ந்து "உங்களுக்குத் தெரியுமா?இமாம் ஹசன் அவர்கள் ஹசரத் முஆவியாவின் காலத்தில் இருந்தார்.அவர் அமைதியானவர்.யாருக்கும் எந்தத் தொல்லையும் கொடுக்காதவர்.அடங்கிப் போகும் ஆண்மகன்.அவர் எழுபது மனைவிமார்களைத் திருமணம் செய்திருந்தார்.அதனால்தான் அவரால் ஹசரத் முஆவியாவுடன் சரி சமனாக ஆளுமையுடன் இருக்க முடியவில்லை.ஹசரத் முஆவியா (ரலி) மூன்று அல்லது நான்கு பெண்களை மாத்திரமே மணந்திருந்தார்.அது மட்டுமன்றி இமாம் ஹசன் ஒரே தடவையில் நான்கு மனைவிமார்களைத் திருமணம் செய்வார்.அதே மாதிரி அதே தடவையில் இன்னும் நான்கு மனைவிமார்களைத் தலாக்கும் சொல்வார்.அக்காலத்தில் இமாம் ஹசன் போல கடுமையான கோபக்காரரை காண முடியாது.அவருக்கு கோபம் வந்தவடன் வீட்டுக்கு விடு விடுவென்று சென்று உடனே ஒரு மனைவியைத் தலாக்கு சொல்லி விடுவார்.அவரே ஹசரத் முஆவியாவுக்கு தனது தலைமைப் பதவிய விட்டுக் கொடுத்திருக்கும் நிலையில், நீங்கள் அவருக்கு முரணான முறையில் ஹசரத் முஆவியா (ரலி) அவர்கள் சம்பந்தமாக எப்படி இப்படி சொல்வீர்கள்?ஹசரத் முஆவியா (ரலி) அவர்கள் நேரிய கலீபாவாக இல்லாமல் இருந்திருந்தால் இமாம் ஹசன் அவரது கலீபா பதவியை ஏற்றிருக்கப் போவதில்லையல்லவா ?ஆனால்,அவர் முஆவியா (ரலி) யை தனது தலைவராக ஏற்றிருக்கிறார்." என்று பொரிந்துத் தள்ளினார்.
நமது நண்பர் அவரை சாந்தப் படுத்தினார்.
அதன் பின்னர் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் வரை அவர்கள் நம்முடன் கழித்தனர்.
அந்த இரண்டு மணித்தியாலங்களில் அவர்கள் பேசியது எதுவுமே எனது காதில் விழவில்லை.
என்னுடைய செவியில் ரீங்காரமாக ரீங்காரித்து திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தது ஒரேமாதிரியான செய்திகள்.............
இமாம் ஹசன் ஸலாமுன் அலைஹி சம்பந்தமாக அவர் கூறிய செய்திகளில் பொதிந்திருக்கும் உண்மைகள் என்ன?
அவரது வாயில் இருந்து உணர்ச்சி பூர்வமாக வெளி வந்த ஒவ்வொரு செய்தியும் ஒரு இமாமின் தனித்தன்மையை சுக்குநூறாக தகர்த்தெறியும் கோரம் கொண்ட கொடுமையான அபத்தமான செய்திகள்.
'பிரச்சினை இல்லாதவர்....'
'அடங்கிப் போகும் ஆண்மகன்......'
'எழுபது மனைவிமார்கள்.........'
'ஒரே தடவையில் நான்கு மனைவியரை மணந்து அதே மேடையில் நான்கு மனைவியரை விவாகரத்து செய்யும் மைனர் மாப்பிள்ளை'ரகம் தொனிக்கும் போக்கு..........'
'எழுபது மனைவியருடன் உல்லாசமாக அல்லது தலை போகும் பிரச்சினைகளுடன் காலம் கழிந்ததால் அமீர் முஆவியாவின் தராதரத்தை விடவும் தரம் தாழ்ந்த நிலை..........'
'கடுமையான கோபக்காரர் .....'
'கோபம் வந்தவுடன் கோபத்தை அடக்கும் வழி தெரியாது செய்வதறியாமல் வீட்டுக்கு ஓடோடி சென்று அப்பாவி மனைவி ஒருவரை தலாக்கு சொல்லும் வேகம்............ஆண்மைத் தொலைத்த காம்பீரம்..........'
இவை அந்த உலமாவின் செய்திகளில் பொதிந்திருக்கும் சாரம்.
இந்தக் கதைகளில் ஒளிந்திருக்கும் இரகசியங்கள் யாவை?
உடுகொடை உலமாக்கள் விடைபெற்று போனதிலிருந்து இமாம் ஹசன் ஸலாமுன் அலைஹி சம்பந்தமாக அவர்கள் கூறிய கதைகள் சொல்லாமல் சொல்லும் கதைகளைத் தேடத் துவங்கினேன்.
அந்தத் தேடல்கள் மிகவும் சுதந்திரமாக சிறகடித்து அந்தக் கதைகள் சொல்லும் கதைகளை சின்னாபின்னமாக சிதறடித்த அழகை இனி கவனிப்போம்.
அடுத்த பதிவில் தொடரும்........
3 comments:
என்ன இது என்ன இது புதிது புதிதாக என்னவோ எல்லாம் சொல்லப்படுகின்றதே. இதனை விளக்கமாகச் சொலலுங்கள். பதிவை எதிர்பார்த்திருக்கின்றோம்
Salaam Alaikum. I am eagerly waiting for your next Post.
Wa Salaam.
Muhammad Ali.
நண்பர் கல்முனைக் கலீல் ரஹ்மான்.......உங்களது வருகையை நிதமும் எதிர் நோக்க வைத்து விட்டீர்கள்.உங்களது பின்னூட்டம் நமக்கு உற்சாகத்தை தருகிறது.நன்றி.
நீண்ட நாள்களுக்குப் பிறகு நமது இந்திய நண்பர் முஹம்மத் அலி பதிவுக்கு வந்து அவர் நம்மை இன்னும் மறக்கவில்லை என்பதை நிரூபித்து நமக்கு உற்சாகமூட்டும் பின்னூட்டத்தை வரைந்திருக்கிறார்.
நமது இணைய நண்பர் அன்புராஜ் ஒரு மாயை.....அல்லது நாமே உருவகித்த ஒரு கதாபாத்திரம் என்று நமது முஸ்லிம் சகோதரர்கள் குழம்பியிருந்த தருணம் அவர்களது யூகங்கள் தவறு என்று கோடிட்டவர் நண்பர் முஹம்மத் அலி.
நாம் அதனை நன்றியுடன் இன்னும் மறக்கவில்லை.
நண்பர்களின் வருகைக்கும் உவந்தளித்த பின்னூட்டங்களுக்கும் நன்றி!.....நன்றி!!....நன்றி!!!
Post a Comment