புஹாரி ஹதீத் கிரந்தத்திலும், முஸ்லிம் ஹதீத் கிரந்தத்திலும் பதிவாகி இருக்கின்ற சில ஹதீத்கள் நபி (ஸல்) அவர்களின் அந்தஸ்த்தை குறைத்து மதிப்பிடும் அளவுக்கு ஆபத்தானவைகளாக இருக்கின்றன.
அபூஹுரைரா அறிவிக்கிறார்கள்;
ஜுரைஜ் என்ற பெயருள்ள ஒரு இஸ்ரவேலர் இருந்தார்.
அவர் தனது ஆசிரமத்தில் தொழுதுகொண்டு இருக்கும் பொழுது, அவரது தாயார் அவரை அழைத்தார்.
அவர் தனக்குள் "நான் எனது தாயாருக்கு பதில் சொல்வதா, அல்லது எனது தொழுகையை முடிப்பதா?" என்று கூறிக் கொண்டார்.
அவரது தாயார்"யா! அல்லாஹ்! எனது மகனை விபச்சாரி அழைக்காத நிலையில் விட்டு விடாதே" என்று பிரார்த்தித்தார்.
ஒரு நாள், ஜுரைஜ் தனது ஆசிரமத்தில் இருக்கும் பொழுது ஒரு விபச்சாரி அவருடன் சல்லாபம் செய்யும் நோக்கில் நெருங்கினார்.
ஜுரைஜ் அவளது ஆசைக்கு இணங்கவில்லை.
அந்த விபச்சாரி ஒரு ஆட்டிடையனுடன் உறவு கொண்டு ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள்.
அந்தக் குழந்தையின் தந்தை ஜுரைஜ் என்று ஊரார்களிடம் முறையிட்டாள்.
கோபம் கொண்ட ஊரார் ஜுரைஜுடைய ஆசிரமத்தை உடைத்து நொறுக்கி,அவரை அவமானப் படுத்தி விட்டார்கள்.
உடனே ஜுரைஜ் வுழு எடுத்து அல்லாஹ்வை தொழுது விட்டு அந்தக் குழந்தையிடம் வந்து "உனது தந்தை யார்?" என்று கேட்டார்.
அதற்கு குழந்தை "எனது தந்தை 'இன்ன' ஆட்டிடையன்" என்று சொன்னது.
அதன் பின்னர் தமது தவறுக்கு வருந்திய ஊரார் "நாம் உங்களுக்கு தங்கத்தினால் ஒரு ஆசிரமம் செய்து தருகிறோம்" என்று சொன்னார்கள்.
"அது தேவையில்லை " என்ற ஜுரைஜ் "கலி மண்ணினால் செய்து தாருங்கள்" என்றார்.
இது ஒரு ஹதீத்.
இதே பாணியில் அபூஹுரைரா அறிவிக்கும் இன்னுமொரு ஹதீத் இப்படி பதியப் பட்டு இருக்கிறது.
இஸ்ரேலிய பெண்ணொருவர் தனது குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டிருக்கும் பொழுது குதிரையில் திடகாத்திரமான ஒரு மனிதன் அவளைக் கடந்து சென்றான்.
உடனே அவள் "யா! அல்லாஹ்! என்னுடைய குழந்தையை இவனைப் போல ஆக்குவாயாக" என்று பிரார்த்தித்தாள்.
உடனே பாலருந்திக் கொண்டிருந்த அந்தக் குழந்தை பாலருந்துவதை நிறுத்தி விட்டு "யா! அல்லாஹ் ! என்னை நீ அவனைப் போல ஆக்காதே" என்று கூறிவிட்டு மீண்டும் பாலருந்தத் துவங்கியது.
அதன் பின்னர் சிறைப் பட்ட ஒரு பெண் அந்தத் தாயாரைக் கடந்து சென்றாள்.
உடனே அந்தத் தாயார்"யா! அல்லாஹ்! என் குழந்தையை இவளைப் போல ஆக்காதே" என்று பிரார்த்தித்தாள்.
உடனே பாலருந்திக் கொண்டிருந்த அந்தக் குழந்தை பாலருந்துவதை நிறுத்தி விட்டு "யா! அல்லாஹ் ! என்னை நீ அவளைப் போல ஆக்கிவிடு " என்று கூறிவிட்டு மீண்டும் பாலருந்தத் துவங்கியது.
தாயார் குழந்தையிடம்"நீ ஏன் அப்படி செய்தாய்?" என்று வினவினாள்.
அதற்கு அந்தக் குழந்தை"குதிரையில் சென்ற அந்த மனிதன் ஒரு கொடியவன்.அந்தப் பெண்ணை எல்லோரும் திருடி என்கிறார்கள். ஆனால், அவள் திருடி அல்ல. மிகவும் நல்லவள்" என்று பதில் சொல்லியது..
அபூ ஹுரைரா அறிவிக்கும் இந்த ஹதீத்களில் தொக்கி இருக்கின்ற இருக்கின்ற அபத்தங்கள் புரிகிறதா?
முதல் கதையின் அபத்தம் ஒன்று:
இவ்வாறான அற்புதங்கள் செய்து காட்டும் அளவுக்கு ஜுரைஜ் ஒரு நபி அல்ல.
முதல் கதையின் அபத்தம் இரண்டு:
தொழுகைக்கு முன்னர் வுழு எடுக்கும் சட்டம் இஸ்லாத்தில்தான் நிர்ணயிக்கப்பட்டது.இஸ்லாத்துக்கு முந்திய யூத கிறிஸ்தவ துறவிகள் குளிப்பது இல்லை.தண்ணீரை விட்டும் ஒதுங்கி இருப்பதையும் அவர்கள் துறவரமாகவே கருதினார்கள்.
முதல் கதையின் அபத்தம் மூன்று:
ஆட்டிடையனுக்குப் பிறந்த அந்தக் குழந்தையும் ஒரு நபி அல்ல.
முதல் கதையின் அபத்தம் நான்கு:
அன்னை மரியம் (அலை) அவர்களது கண்ணியத்தை சிதைக்கும் வகையில் ஒரு விபச்சாரி அவருக்கு சரி நிகராக உயர்த்தப் பட்டிருக்கும் அநியாயம் , நமது பெரு மதிப்புக்குரிய அபூ ஹுரைராவினால் அரங்கேற்றப் பட்டிருக்கிறது.
முதல் கதையின் அபத்தம் ஐந்து:
பச்சிளம் குழந்தையாக இருக்கும் பொழுது தொட்டிலில் இருந்து பேசி எது வித களங்கமும் இல்லாத தனது தாயாருக்காக வாதாடிய ஹசரத் ஈஸா (அலை) அவர்களின் கண்ணியம் குறி வைத்து தகர்க்கப் பட்டு இருக்கிறது.
இரண்டாவது கதையின் அபத்தம் ஒன்று:
அந்தக் குழந்தையோ அல்லது அதன் தாயாரோ நபிமாரோ அல்லது நபிமார்களின் பெற்றோர்களோ அல்ல.
இரண்டாவது கதையின் அபத்தம் இரண்டு:
இந்தக் கதைக்கு எதுவித காரண காரியமும் இல்லை.
இனி, இந்த இரண்டு ஹதீத்களும் அல் குரானுக்கு முரண் படும் அழகை கவனியுங்கள்.
அல்லாஹ் நிர்ணயித்த இயற்கை சட்டங்களில் எதுவித மாற்றமும் இல்லை என்கிற புனித அல் குரானின் ஒரு ஆயத்துடன் இந்த கட்டுக் கதைகள் முரண்பட்டு , புனையப் பட்ட ஹதீத்கலாக தம்மை இனங்காட்டிக் கொள்கின்றன.
இந்த ஹதீத்களின் பொய்மையை துகிலுரித்துக் காட்டும் புனித அல் குரான் ஆயத் இதுதான்.
"உங்களுடைய முகத்தை தீனுக்காக நேரான முறையில் நிலை நிறுத்திக் கொள்ளுவீர்களாக;மனிதனின் படைப்பு சம்பந்தமாக இறைவன் ஏற்படுத்திய இயற்கை நியதியில் எந்த மாற்றமும் இல்லை;இதுதான் உறுதியான வழிமுறையாகவும் இருக்கிறது;.ஆனால், மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறிய மாட்டார்கள்"
(அல் குரான்: 30 : 30 )
இந்த அல் குரான் ஆயத்தை அபூஹுரைரா அறியாமல் போனது ஆச்சரியம்தான்.
இன்ஷா அல்லாஹ் - நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அல் குரானுக்கு முரண் பட்டிருக்கிற இது போன்ற ஹதீத்களை உங்களது மேலான கவனத்திற்கு கொண்டு வருவதற்காக அவ்வப்போது பதிவிளிடுகிறோம்.
No comments:
Post a Comment