அன்புள்ள டாக்டர் ரிபாயா ஆண்டிக்கு ,
நான் சுமையா எழுதும் மடல்!
ஆண்டி,உங்களுக்கு உங்களது தந்தையின் மரண தினம் நினைவில் இருக்கிறதா?
அன்று நீங்கள் விடுமுறை எடுத்து உங்களது தந்தையின் இறுதி நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தீர்கள்.
எனது தந்தையும் எனது நண்பிகளின் தந்தைமார்களும் உங்கள் தந்தையின் மரணத்துக்காக விடுமுறை எடுத்து உங்களுடன் உங்களது துயரில் பங்கேற்கவில்லை.
அதே போன்று உங்களது குழந்தையின் பிறந்த நாளன்றும் நீங்கள் விடுமுறையில் இருந்தீர்கள்.
அன்றைய தினமும் நமது பெற்றோர் விடுமுறை எடுத்து உங்களது மகிழ்ச்சியில் கலந்துக் கொள்ளவில்லை.
ஏன் தெரியுமா?
ஏனெனில்,உங்களது துயரமோ அல்லது மகிழ்ச்சியோ நமக்கு தேவை இல்லாத ஒன்று என்று நமது பெற்றோர் கருதியதால் அதனைப் பற்றி அவர்கள் அக்கறைக் கொள்ளவில்லை.
கௌதம புத்தர் பௌத்தர்களுக்கு முக்கியமானவர்.
அவரை முக்கியமானவர் என்று கருதும் மக்களுக்கு அவர் பிறந்த நாளும் இறந்த நாளும் முக்கியமானது.
அதே போன்று இயேசு கிறிஸ்த்து கிறிஸ்தவர்களுக்கு முக்கியமானவர்.
அவரின் முக்கியத்துவத்தின் மகிமை ஒரு பெளத்தருக்கு அல்லது அவரை கருத்திட் கொள்ளாத ஒருவருக்கு புரிவதில்லை.
இதே நிலையில்தான் நமது முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் நிலையும் முஸ்லிம்களின் கணிப்பில் இருக்கின்றது.
முஹம்மது நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் முக்கியத்துவம் முஸ்லிம்களுக்கு மகத்துவமானது.அந்த அன்பின் அளவீடு ஒரு முஸ்லிமின் ஈமானின் அம்சமாக புனித இஸ்லாத்தில் கணிக்கப் படுகின்றது.
அண்ணல் நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களை முஸ்லிம் என்று சொல்லும் ஒருவர் தனது பெற்றோரை விடவும்,தனது மனைவி மக்களை விடவும் , தனது உயிரை விடவும் மேலாக நேசிக்காத வரை அந்த முஸ்லிம் உண்மை விசுவாசியாக மாட்டார் என்ற உண்மை முஸ்லிம்களுக்குப் புரியும்.
முஸ்லிம் அல்லாத ஒருவரினால் இந்த அன்பின் ஆழத்தையும் இரகசியத்தையும் உணர்ந்துக் கொள்ள முடியாது.
இலங்கை திருநாட்டில் பல இனங்களைச் சார்ந்த நாம் அனைவரும் ஒற்றுமையாக பரஸ்பரம் ஒருவரை ஒருவர் புரிந்துக் கொண்ட நிலையில் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம்.
இந்த மக்கள் அனைவரும் தாம் நேசிக்கின்ற தமது மதத் தலைவர்களின் பிறந்த நாளையும், மறைந்த நாளையும் நினைவு படுத்தும் தினங்களை பொது விடுமுறை தினமாக அனுஷ்டிக்கும் உரிமை இருப்பது இலங்கை போன்ற பல்லின சமூகங்கள் ஒற்றுமையாக வாழும் நாட்டில் மனித உரிமை என்ற சரத்துக்குள் வருகின்றது.
அந்தத் தலைவர்களை நேசிப்பவர்களின் கௌரவமான உரிமையை மதிக்கும் கடமையை அரசு செய்திருக்கிறது.
அன்றைய விடுமுறை தினத்தில் அந்தக் குறிப்பிட்ட தலைவர்களின் முக்கியத்துவம் தொலைத்த உள்ளங்களின் மக்கள் தமக்குத் தேவையான எதனையும் செய்துக் கொள்ளட்டும்.
அதனை நாம் ஆட்சேபிக்கத் தேவையில்லை.
நாட்டின் நலனில் அக்கறை கொண்டுள்ள உங்களைப் போன்ற உத்தமர்கள் விடுமுறை தினங்களில் வேலை செய்யும் செயல்களை யாரும் தவறாக கருதப் போவதில்லை.
நீங்கள் கௌதம புத்தரின் பிறந்த நாளிலும்,அவரின் மறைவு நாளிலும் வேலை செய்யுங்கள்.
அதட்காகவேண்டி கௌதம புத்தரின் மீது அன்பு கொண்டு அவர் புகழ் பாடும் மக்களுக்குத் துணையாக இருக்கின்ற விடுமுறை தினத்தை இரத்து செய்து அவர்களை சங்கடப் படுத்த முயலவேண்டாம்.
இயேசு நாதர் பிறந்த தினத்தை உலக மக்கள் கொண்டாடுவது நாட்டு நலனில் அக்கறையுள்ள உங்களுக்கு உறுத்துவது நமக்குப் புரிகிறது.
அந்த விடுமுறை நாளை இரத்து செய்யக் கோரி இயேசு நாதரின் மீது அன்பு கொண்டு இயேசு நாதரின் பிறந்த நாளைக் கொண்டாடும் மக்களின் மேலான உரிமையின் மீது கை வைக்க வேண்டாம்.
முஹம்மது நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் மீது சேறு பூசுகின்ற இக்காலத்தில் அவர் மீது நேசம் கொண்டிருக்கின்ற நாம் அவரின் பிறந்த தினத்தை நினைவு படுத்தி அவர் புகழ் பாட .... அவரை சரியாகப் புரிந்துக் கொள்ளத் தவறிப் போன மக்களுக்கு அவர் சம்பந்தமாக அறிவூட்ட அவரின் பிறந்த தினத்தை உபயோகிக்க உத்தேசித்துள்ளோம்.
முஹம்மது நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களை நேசிக்காத மக்களுக்கு அவரின் முக்கியத்துவம் ஒருபோதும் புரியாது.
உங்களுக்கும் அவர் உங்களின் தந்தையை விடவும், உங்களின் குழந்தையை விடவும் , இந்த நாட்டை விடவும் முக்கியமானவர் இல்லை என்ற விடயம் நமக்குத் தெரியும்.
ஆண்டி, நீங்கள் முஸ்லிம்களின் எதிர்கால நலனுக்காக புதிதாக எந்த உரிமையையும் பெற்றுத் தரத் தேவை இல்லை.
நமது தலைவர்கள் பெரும் போராட்டத்துக்கு மத்தியில் பெற்றுத் தந்திருக்கின்ற உரிமைகளை பாது காத்துத் தந்தால் போதும்.
இல்லை.......இல்லை ஆண்டி ....நீங்கள் அதனையும் செய்யத் தேவை இல்லை.
இருக்கின்ற கொஞ்ச நஞ்ச உரிமைகளுக்கு எதிராக களம் இறங்காமல் இருந்தால் அதுவே நீங்கள் முஸ்லிம் சமூகத்துக்குச் செய்யும் பேருதவியாக இருக்கும்.
உங்களது கருத்துக்களுக்கு நீங்களே சொந்தக்காரர்.
நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் பிறந்த தின விடு முறைக்கு எதிராக நீங்கள் முன்னெடுத்துள்ள இந்தக் கருத்துப் போராட்டம் முஸ்லிம்களின் உரிமையைப் பாதிக்கும் செயல் விளைவுகளுக்கு களம் அமைக்கும் அபாயத் தளத்தில் இருப்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.
அது மட்டுமன்றி,நீங்கள் புரட்சிகரமானது என்ற தவறான கருத்தில் அல்லாஹ்வுக்கு எதிராக களமிறங்கி இருக்கின்றீர்கள் என்பதையும் அதன் விளைவுகள் மிகவும் பாரதூரமாக அமையும் என்பதையும் உணர்ந்துக் கொள்ளுங்கள் என்று நினைவு படுத்தி விடை பெறுகின்றேன்.
அன்புடன்,
உங்களைப் போன்ற மேதாவிகளை விட்டும் பாதுகாப்புக் கோரும்.......
குழந்தை சுமையா.........
No comments:
Post a Comment