அஹ்லுல்பைத் Headline Animator

Thursday, February 24, 2011

"நரகத்தில் நபிகளாரின் பெற்றோர்....உமையாக்களுக்கு உதவுகின்ற உலமாக்கள்.....????


"நரகத்தில் நபிகளாரின் பெற்றோர்....உமையாக்களுக்கு உதவுகின்ற நிகழ் கால உலமாக்கள்.....????

இலங்கையில் உள்ள ஜாமியா நளீமியாவின் மூத்த விரிவுரையாளர்கள் நபி (ஸல்) அவர்களின் பெற்றோர் நரகவாதிகள் என்கிற ரீதியிலான பிரசங்கங்களை பகிரங்கமாக செய்து வருகிறார்கள்.

இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் அஸ் செய்க ரிஸ்வி முப்தி அவர்களும் இதே கருத்தை பலமுறை ஜும்மா மேடைகளில் சொல்லி இருக்கிறார்.

நபி (ஸல்) அவர்களின் பெற்றோர் நரகத்தில் வேதனை செய்யப் படுகிறார்கள் என்ற தவறான கருத்துக்கள் இதன் காரணமாக எம்மிடையே வலுவடைய வாய்ப்பு இருக்கிறது.

இந்த தவறான கருத்தினது உருவாக்கத்தையும், அத்தகைய கருத்துக்களின் பொய்மையையும் ஆய்வு செய்யும் நோக்கில் இந்தக் கட்டுரை எழுதப் படுகிறது.  




நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின் சுமார் இருநூற்றம்பது வருடங்களுக்குப் பிறகு சேகரிக்கப் பட்டு அப்போதைய இஸ்லாத்துக்கு முரணான ஆட்சியாளர்களின் அறிஞர்களால் சரி பார்த்து மக்கள் மயப் படுத்தப் பட்ட இந்த ஹதீத்களை கவனியுங்கள்.

இந்த ஹதீத்களின் கருத்தைத் கணித்து தான் நபி (ஸல௦ அவர்களின் பெற்றோர் நரகவாதிகள் என்கிற முடிவுக்கு எங்களது கௌரவத்துக்குரிய உலமாக்கள் வந்திருக்கிறார்கள். 

"நான் என் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவ  மன்னிப்புக் கோர அனுமதி கேட்டேன்.

அவன் அனுமதி வழங்கவில்லை.அவரது அடக்கஸ்தலத்தை சந்திக்க அனுமதி கேட்டேன்.எனக்கு அனுமதி வழங்கினான்."

இதை அபு ஹுரைரா (ரலி)  அறிவிக்கிறார்கள். 

இந்த ஹதீத் இரு அறிவிப்பாளர்  தொடர்களில் வந்துள்ளது.

(ஆதாரம்- முஸ்லிம் இரண்டாம் பாகம்-  1776  வது ஹதீத்)         

அபு ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது; 

நபி (ஸல்) அவர்கள் தம் தாயாரின் அடக்கத் தலத்தை சந்தித்த போது அழுதார்கள்.அவர்களை சுற்றி இருந்தவர்களும் அழுதார்கள்.

அப்போது அவர்கள் 'நான் என் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவ   மன்னிப்புக் கோர அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கப் படவில்லை.

அவரது அடக்கத் தலத்தை சந்திப்பதற்கு அனுமதி கேட்டேன்.எனக்கு அனுமதி வழங்கினான்.

எனவே , அடக்கத் தலங்களை சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்" எனக் கூறினார்கள். 


இந்த ஹதீத் இரு அறிவிப்பாளர்  தொடர்களில் வந்துள்ளது.

(ஆதாரம்- முஸ்லிம் இரண்டாம் பாகம்-  1777  வது ஹதீத்)  

இந்த இரண்டு ஹதீத்களையும் வைத்துக் கொண்டுதான் எங்களது உலமாக்கள்        
நபி (ஸல்) அவர்களின் பெற்றோரை நரகவாதிகள் என்று முடிவு செய்து விட்டார்கள்.

நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினர், அல்லது பெற்றோர் நரகவாதிகள் என்று நம்புவது அல் குரானின் கட்டளைக்கு முற்றிலும் முரணானது என்பதை அவர்கள் சிந்திக்கத் தவறி விட்டார்கள்.

அல் குரானுக்கு முரண்படும் ஹதீத்கள் ஏற்றுக் கொள்ள முடியாதது என்பதையும் அவர்கள் உணரத் தவறி விட்டார்கள்.

உலகத்தில் உள்ள எந்த நீதி மன்றத்திலும் இரு நூற்றி ஐம்பது வருடத்துக்குப் பிறகு சேகரிக்கப் பட்ட ஆவணங்களை  நீதி வழங்கக் கூடிய சாட்சி ஆதாரமாக ஏற்பது இல்லை.

ஆனால், எங்களது மதிப்புக்குரிய உலமாக்கள் இந்த ஹதீத்களை நுணுக்கமாக ஆராயாமல் கண்ணை மூடிக் கொண்டு இவற்றை தமது தரப்பு வாதத்துக்கு உரிய சாட்சியாக ஏற்றுக் கொண்டு இருப்பது அவர்கள் விடுகின்ற பாரிய தவறாகும்.

அது மட்டுமன்றி, அவர்கள் இதன் அடிப்படையில் நபி (ஸல்) அவர்களின் குடும்பத்துக்கு எதிராக  தீர்ப்பு வழங்குவதுதான் பரிதாபமான வேடிக்கையாகும்.

என்றாலும் கூட நாம் மேலே குறிப்பிட்ட ஹதீதில் எங்காவது 'நபி (ஸல்) அவர்களின் பெற்றோர் பாவிகள் அல்லது இறை நிராகரிப்பாளர்கள் அல்லது இறைவனின் முனிவுக்கு ஆளானவர்கள்' என்று அர்த்தம் தொனிக்கும் வார்த்தைப் பிரயோகம் தெரிகிறதா?

இல்லை அல்லவா?

ஆனால், இந்த ஹதீதை வைத்துக் கொண்டு தான் எங்களது உலமாக்கள் நபி (ஸல்) அவர்களின் பெற்றோர் நரகத்தில் வேதனை செய்யப் படுகிறார்கள் என்ற புத்தி சாலித்தனமான முடிவுக்கு வந்து இருக்கிறார்கள்.

அத்தகைய அறிஞர்களிடம் நாம் கேட்கும் கேள்விகள் மிக இலகுவானவை?     

"ஒரு பாவமும் செய்யாத நபி (ஸல்) அவர்களின் பெற்றோருக்காக நபி (ஸல்) அவர்கள் எதற்காக பாவ மன்னிப்புக் கோரி அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும்?"

"பாவமே செய்யாத அவர்களுக்காக நபி (ஸல்) அவர்கள் பாவ மன்னிப்புக் கேட்க அல்லாஹ் எதற்காக அனுமதிக்க வேண்டும்?"

அல்லாஹுத்தாலா நபி (ஸல்) அவர்களுக்கு அவர்களது பெற்றோர்களுக்காக பாவ மன்னிப்பு கேட்க அனுமதிக்காத செய்கையின் மூலம் அந்த புண்ணியவான்களை கௌரவித்து இருக்கிறானே தவிர, அந்த நல்லோர்கள் நரகவாதிகள் என்று எமக்கு செய்தி சொல்லவில்லை. 

'நபியே! நீங்கள் மன்னிப்பு கேட்கும் அளவிற்கு அவர்கள் அப்படி ஒரு தவறும் செய்ய வில்லை. அவர்களைப் பற்றி நீங்கள் கவலை கொள்ள வேண்டியது இல்லை. அவர்கள் என் பொறுப்பில் பத்திரமாக இருக்கிறார்கள்' என்ற செய்திதான் இந்த ஹதீத்களில் இருக்கின்றன.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்;

"மனிதன் இறந்து விட்டால் அவனுடைய மூன்று செயல்களைத்தவிர மற்ற அனைத்தும் நின்று விடுகிம்றன.

1 . நிலையான அருட் கொடை
2 .  பயன் பெறப் படும் கல்வி
3 . அவனுக்காகப் பிரார்த்திக்கும்  அவனுடைய நல்ல குழந்தை.

மூன்று அறிவிப்பாளர்களின் தொடரில் வரும் இந்த அறிவிப்பையும் அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.
(ஆதாரம்; முஸ்லிம் மூன்றாம் பாகம் 3358  வது ஹதீத்)

இந்த ஹதீதின் கருத்தின் அடிப்படையில் ஒரு நல்ல குழந்தையின் நல்ல செயல்களில் அந்த குழந்தையின் பெற்றோர்களுக்கு பங்கு இருக்கிறது.

அப்படி என்றால் அல்லாஹுத்தாலாவை எமக்கு சரியான முறையில் இனங்காட்டிய நபி (ஸல்) அவர்களின் தூதுத்துவத்தில் அவர்களின் பெற்றோருக்கு முழுமையான பங்கு இருக்கிறது எனபது நிஜம்.

நுபுவ்வத்திலேயே முழுமையான பங்கு கிடைக்கின்ற நபி (ஸல்) அவர்களின் பெற்றோர் சுவன வாதிகள் என்பதில் உள்ள கருத்து வேறுபாடுதான் என்ன?

நல்ல குழந்தையின் பிரார்த்தனையில் பெற்றோருக்கு பங்கு இருக்கும் பொழுது இறுதி ரசூல் (ஸல்) அவர்களின் பிரார்த்தனையை அல்லாஹுத்தாலா ஒரு போதும் தடுக்கப் போவது இல்லை.

 இது தவிர, நபி (ஸல்) அவர்களது பெற்றோர் சுவனவாசிகள் என்பதற்கு ஆதாரமாக அல் குரான்   சான்று பகர்கின்ற அழகை பின் வரும் ஆயத்துகளில்  எம்மால் காண முடியும்.

"அவனை அன்றி (வேறு எவரையும் ) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்ய வேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்து இருக்கிறான்.அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால் அவர்களை 'உய்ப்' (சி ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம்.- அவ்விருவரையும் (உம்மிடமிருந்து) விரட்ட வேண்டாம்.- இன்னும் அவ்விருவர் இடமும் கனிவான ,கண்ணியமான பேச்சையே பேசுவீராக" ' 

"இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக! மேலும், 'என் இறைவனே!நான் சிறு பிள்ளையாக  இருந்த போது என்னை (பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல நீயும் அவ்விருவருக்கும் கிருபை செய்வாயாக !" என்றும் கூறிப் பிரார்த் திப்பீராக"
(அல் குரான் அத்தியாயம் 17  : ஆயாத்கள்   23  /  24 )

நபி (ஸல்) அவர்களுக்கு அவர்களது பெற்றோர்களுக்காக பிரார்த்திக்குமாறும் அத்தகைய பிரார்த்தனை எப்படி அமைய வேண்டும் என்றும் அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் அழகை பாருங்கள்.
  
இந்த பிரார்த்தனையில் கூட பாவ மன்னிப்புக் கோரும் தன்மை இல்லை.
பெற்றோருக்கு 'கிருபை' செய்யுமாறு வேண்டும் பணிவான வேண்டுதல்கள் தான் தெரிகிறது..

இந்த ஆயத்தில் உள்ள இன்னொரு முக்கியமான இரகசியத்தை நாம் கவனிக்கத் தவறி விடுகிறோம்.

அதென்ன இரகசியம்?

இந்த ஆயத்தில் அல்லாஹுத்தால "உய்ப் (சி) " என்று சடைந்தும் சொல்லிவிடாதீர்கள்" என்று சொன்னது எங்களது பெற்றோர்களை என்று நாம் தப்புக் கணக்கு போட்டுக் கொண்டு இருக்கிறோம்.

ஆனால், நிஜத்தில் அது எல்லாநபிமார்களின் பெற்றோர்களை மட்டும்  குறிக்கின்றதே தவிர, எமது பெற்றோர்களை அல்ல என்பதை நாம் கவனமாக நெஞ்சில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

நபிமார்களின் பெற்றோர்களை "சி" என்று கூட சொல்ல வேண்டாம் என அல்லாஹ் எமக்கு கட்டளை பிறப்பித்து இருக்க எங்களது மார்க்க அறிஞர்கள் வரிந்து கட்டிக் கொண்டு அந்த பெற்றோர்களை நரகத்துக்கு அனுப்புவதன் மர்மம்தான் என்ன?

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்;

"அன்னையரை புண் படுத்துவது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது, அடுத்தவருக்கு கொடுக்க வேண்டியதை மறுப்பதும், அடுத்தவருக்குரியத்தை தருமாறு கேட்பதையும் அல்லாஹ் உங்களுக்கு தடை செய்துள்ளான்.

மேலும், ஊர்ஜிதமற்றவற்றை  பேசுவது , அதிகமாக கேள்வி கேட்பது, செல்வத்தை வீணாக்குவது ஆகிய மூன்றையும் உங்களுக்கு தடை செய்து உள்ளான்.
இதை முகிரா பின் ஸுஅபா (ரலி) அறிவிக்கிறார்கள்.
(ஆதாரம்; முஸ்லிம் மூன்றாம் பாகம் 3535  வது ஹதீத்)            

இந்த ஹதீதின் படி மனிதர்களாகிய எங்களுக்கே எங்களது அன்னையரை புண் படுத்த வேண்டாம் என எச்சரிக்கை செய்கின்ற அல்லாஹுத்தாலா அதே தவறை அல்லாஹ்வே செய்வானா? என எங்களது உலமாக்களிடம் நாம் கேட்க விரும்புகிறோம்.

இதைத் தவிர, தனக்கு ஊர்ஜிதமற்றவற்றை பேச வேண்டாம் என்றும் எமது உலமாக்களுக்கு இந்த ஹதீத் தடை விதித்து எச்சரிக்கை விடுக்கிறதையும் கவனியுங்கள்.

இந்த ஹதீதின் கருத்தின் பிரகாரம் யாராவது நபி (ஸல்) அவர்களின் பெற்றோரை நரகவாதிகள் என்று ஊர்ஜிதம் இல்லாத இந்த அசெய்தியை சொல்கிறாரோ அவர் அல்லாஹ்வின் வெறுப்புக்கு ஆளாகிறார்.

அல்லாஹ்வின் வெறுப்பு கடுமையான நரக வேதனையை கொண்டு வரும்.

இதன் அடிப்படையில் நபி (ஸல்) அவர்களின் பெற்றோரை நரகத்துக்கு அனுப்புகின்ற எங்களது உலமாக்கள் பரிதாபகரமாக தங்களது நரக படு குழியை ,அவர்களே அவர்களின் வாயால் தோண்டிக் கொள்ளும் அவலத்தை பாருங்கள்.
                                     
இது தவிர, அல்லாஹ்வின் வேதனை நிச்சயிக்கப் பட்ட பாவிகளின் கப்ருகளின் அருகில் செல்வதற்குக் கூட நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அனுமதி வழங்கியது இல்லை.

பாவிகள் பற்றிய அல்லாஹ்வின் வேத வசனம் இது.

அத்தகைய பாவிகளைப் பற்றி புனித அல் குரானில் "அவர்களில் யாராவது ஒருவர் இறந்துவிட்டால் அவருக்காக நீர் ஒருக்காலும் தொழுகை தொழ வேண்டாம்.; இன்னும் அவர் கப்ரில் நிற்க வேண்டாம்; ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்து பாவிகளாகவே இறந்தார்கள்" என்று வருகிறது.
(அல் குரான் அத்தியாயம் 9  : ஆயாத் 84  )

பாவிகளின் கப்ரின் அருகே செல்ல வேண்டாம் என்று அல்லாஹ்,அவனது  நபி (ஸல்) அவர்களை தடுத்து இருக்க , எங்கள் அறிவியல் விபச்சாகரர்கள் சொல்லுவது போல நபி (ஸல்) அவர்களின் பெற்றோர் பாவிகளாக இருந்து கப்ரில் வேதனை செய்யப்படும் நிலை இருந்திருந்தால், நிச்சயமாக நபி (ஸல்) அவர்களுக்கு அந்த அடக்கஸ்தலத்துக்கு செல்ல அனுமதி கிடைக்கப் போவது இல்லை.

அடக்கஸ்தலம் என்ன? அதன் அருகே செல்ல கூட அவருக்கு அனுமதி இல்லை.

இந்த நிலையில் அல்லாஹுத்தாலா நபி (ஸல்) அவர்களுக்கு அவர்களது தாயாரின் அடக்கஸ்தலத்தை தரிசிக்க அனுமதி வழங்கிய செய்கை ஒன்றே அவர்கள் அல்லாஹ்வின் அருள் பெற்ற நல் அடியார்கள் என்பதற்கு வலுவான சாட்சியாகும். 

அல் குரானில் இன்னுமொரு இடத்தில் அல்லாஹ் இப்படி கட்டளை பிறப்பிக்கின்றான்

"முஷ்ரிக்குகள் (இணைவைப்பவர்கள்) தம் நெருங்கிய உறவினர்களாக இருப்பினும் , நிச்சயமாக அவர்கள் நரகவாதிகள் என்று தெளிவாக்கப் பட்ட பின் அவர்களுக்காக மன்னிப்பு கோருவது நபிக்கும், ஈமான் கொண்டவர்களுக்கும் தகுதியானதல்ல"
(அல் குரான் அத்தியாயம் 9  : ஆயாத் 113 )

நபி (ஸல்) அவர்களின் பெற்றோர் நரகவாதிகள் என்றால் அவர்களுக்காக பிரார்த்திக்குமாறும் , எப்படி பிரார்த்திக்க வேண்டும் என்கிற பிரார்த்திக்கும் முறையையும் அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு கற்றுக் கொடுப்பானா?

நபி (ஸல்) அவர்களின் பெற்றோர் நரகவாதிகள்  என்கிற வாதம் பிழையானது என்று இப்பொழுது உங்களுக்கு புரிந்து இருக்கும் என்று நம்புகிறோம்.. 

தப்ஸீர் ஹாதில், தப்ஸீர் ஸாயி,தப்ஸீர் ஜமல், தப்ஸீர் ரூஹுல் பயான் ஆகிய அல் குரான் விரிவுரைக் கிரந்தங்களில் எங்களது கருத்துக்கு வலு சேர்க்கும் பல ஆதாரங்கள் நிறைந்து கிடக்கின்றன.

நபி ஸாலிஹ் (அலை) உடைய ஒட்டகம் சுவனம் செல்கிறது.

ஸாலிஹ் (அலை) உடன் அவரது தூதுத்துவத்துடன் சம்பந்தப் பட்ட ஒரே காரணத்தை தவிர அந்த ஒட்டகத்துக்கு வேறு எந்த சிறப்பும் கிடையாது.

நபி இப்ராஹீம் (அலை) உடைய ஆடும் சுவனம் செல்கிறது.

இஸ்மாயில் (அலை) அவர்களுக்குப் பகரமாக அறுக்கப் பட்டதை தவிர வேறு எந்த சிறப்பும் அந்த ஆட்டுக்கு இல்லை.

'ஹுத் ஹுத்' என்கிற பறவை நபி சுலைமான் (அலை) அவர்களுக்கு தண்ணீர் இருக்கும் இடங்களை தேடி கண்டு பிடித்து கொடுக்கும் வேலையை செய்து வந்தது.

ஒரு நாள் அந்தப் பறவை 'பல்கிஸ்' மகா ராணியின் இராஜாங்கத்தைப் பற்றிய செய்தியை நபி சுலைமான் (அலை) அவர்களிடம் கொண்டு வர, 'பல்கிஸ்' இராணியின் சமூகம் இஸ்லாத்துக்கு வந்த செய்தி பிரசித்தம்.


இதன் காரணமாக 'ஹுத் ஹுத்' என்கிற அந்தப் பறவையும் சுவனம் செல்கிறது.


ஒரு முறை நபி சுலைமான்(அலை) அவர்களும் அவர்களது படையினரும் வரும் வழியில் எறும்புகள் நிறைந்த ஒரு இடத்தை அடைகிறார்கள்.

அங்கே ஒரு எறும்பு மற்ற எறும்புகளை எச்சரித்து ஏனைய எறும்புகளை பாதுகாக்க உதவுகிறது.

""இறுதியாக , எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி)   எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; சுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு" என்று கூறிட்டு"
(அல் குரான் 27  : 18  )     

சக எறும்புகளைக் காப்பாற்ற முயற்சி செய்தமைக்கு நன்றிக் கடனாக அந்த எறும்பும் சுவனம் செல்கிறது.

'அஷ்ஹாபுல் கஹ்ப்' உடைய நாயின்  சரித்திரம் நீங்கள் அறிந்ததே. 

அந்த நாய் கூட சுவனம் செல்லும் பாக்கியத்தை, அந்த குகை வாசிகளுடன் அவர்களைப் பாதுகாத்துக் கொண்டு இருந்த காரணத்தால் அடைகிறது.

அந்தந்த கால நபிமார்களுடன் அவர்களது தூதுதுவத்துக்கு தொடர்பு கொண்ட காரணத்தை தவிர வேறு எந்த சிறப்பு தகுதிகளையும் இந்த ஜீவராசிகள் பெற்றிருக்கவில்லை என்பதை கருத்திட்  கொள்ளவும்.

இதே போல முஹம்மத்  (ஸல்) அவர்கள், அவர்களது பயணத்துக்கு உபயோகித்த கழுதை,  ஒட்டகம் ஆகிய இரண்டு ஜீவன்களும் நபி (ஸல்) அவர்களை சுமந்து சென்ற ஒரே காரணத்துக்காக சுவனம் செல்லும் பாக்கியத்தை பெறுகின்றன.

(ஆதாரம்: தப்ஸீர் ஹாதில், தப்ஸீர் ஸாயி,தப்ஸீர் ஜமல், தப்ஸீர் ரூஹுல் பயான்)

அப்படி என்றால், அகிலங்களின் அருட்கொடையாம் முஹம்மது (ஸல்) அவர்களை பத்து மாதங்கள் வயிற்றில் சுமந்து அவர்களை பெற்றெடுத்த அவர்களின் தாயார் சுவனம் செல்ல , நபி (ஸல்) அவர்களை வயிற்றில் சுமந்ததைத் தவிர வேறு என்ன விசேஷ தகுதி அவருக்கு தேவைப் படுகின்றது?

நபிமார்களுடன் ஏதோ ஒரு வகையில் சம்பந்தப் பட்டமைக்கே சுவனம் செல்லும் பாக்கியம் வாய் இல்லா ஜீவராசிகளுக்கு கிடைக்கும் பொழுது,  இறுதி ரிசாலத்தை சுமந்து வந்த நபி (ஸல்) அவர்களின் தாயாராக இருப்பதற்கு இறைவனால் தேர்ந்து எடுக்கப் பட்ட ஒரு நல்லடியாரின் தகுதிகளையும், தராதரங்களையும் வர்ணிப்பதற்கு   வார்த்தைகள் உண்டா? எனக் கேட்க விரும்புகிறோம்.

அல்லாஹ்   தனது இறுதி நபியின் பெற்றோரை நரகத்தில் வேதனை செய்வதற்கு என்ன காரணம் இருக்கப் போகிறது?

அல்லாஹுத்தாலாவுக்கு அவர்களுடன் அப்படி என்னதான் கோபம்?

நபிகளாரின் பிறப்புக்கு காரணமாக இருந்தார்கள் என்பதைத் தவிர நபி (ஸல்) அவர்களின் பெற்றோரைப் பற்றி எமக்கு வேறு எந்த தகவல்களும் சரியாக கிடைக்கவில்லை.

இந்த நிலையில் நரகத்தில் வேதனை செய்யப் படும் அளவுக்கு அவர்கள் என்னதான் தவறு செய்தார்கள்?

நபி (ஸல்) அவர்களின் பெற்றோருக்கு எதிரான இந்தக் கட்டுக் கதைகள் அனைத்தும், நபி (ஸல்) அவர்களின் அஹ்லுல் பைத்களின் கடும் விரோதிகளான 'உமையா' ஆட்சியாளர்களினாலும், அதன் பிறகு, அஹ்லுல் பைத்கள்  தமது அரசாட்சிக்கு சவாலாக இருப்பார்கள் என்று பயந்த அப்பாஸிய ஆட்சியாளர்களினாலும் ஆரம்பித்து வைக்கப் பட்டதை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் இப்பொழுது நாம் இருக்கிறோம்.

நபிகளாரின் குடும்பத்தவர்களை பகிரங்கமாக தூற்றும் அநாகரிக கலாச்சாரம் அமீர்   முஆவியாவின் காலத்தில் தொடக்கி வைக்கப் பட்டது.

அமீர் முஆவியாவுக்கு 'அஹ்லுல் பைத்'களுடன் அப்படி என்னதான் பகை?

அந்த பகையின் பின்னால் இப்படி ஒரு கதை இருக்கிறது.

ஹிந்தா பின்த் அத்பா அவரது தாயார்.

அவர் பாக்காஹ் பின் முகைரா குறைஷி என்பவரை திருமணம் முடித்து இருந்தார்.

சில நாள்கள் செல்ல அவர் கருத் தரித்தார்.

அவர் கரு தரித்த விதத்திலும்,   அவரின் நடத்தையிலும்   சந்தேகம் கொண்ட பாக்காஹ் ஹிந்தாவை  வீட்டை விட்டும் துரத்தி விட்டார்.

புகுந்த வீட்டில் இருந்து பிறந்த வீட்டுக்கு வந்த ஹிந்தாவை அவரது தந்தை ஒரு ஜோசியரிடம் அழைத்து சென்று இருக்கிறார்.

ஹிந்தாவின் பிறந்த திகதியையும்,  அவர் கர்ப்பம் தரித்த முறைகளையும் கேட்டறிந்த அந்த ஜோசியர்,  சில கணக்கு களை போட்டுப் பார்த்து ஹிந்தா நன் நடத்தை உள்ள பெண் என்று நன்சான்றிதல் வழங்கியுள்ளார்.

அது மட்டுமன்றி, ஹிந்தாவுக்கு கிடைக்க இருக்கும் மகனின் பெயர் முஆவியா எனவும், அவர் பிட் காலத்தில் அராபியாவின் அரசராக வருவார் என்றும் அமீர் முஆவியாவின்  பிறப்புக்கு முன்னே அந்த மகனைப் பற்றி முன் அறிவிப்பும் செய்துள்ளார்.

இதனை அறிந்த பாக்காஹ் ஹிந்தாவுடன் மீண்டும் கூடி வாழ முடிவு செய்துள்ளார்.

நன் நடத்தை???? உள்ள ஹிந்தா அதற்கு உடன் படவில்லை.

பிறகு , ஹிந்தா ஹசரத் அபு சுபியானை மணந்துக்  கொள்ள அதன் பின்னர்  முஆவியா பிறக்கிறார். 
(ஆதாரம் ; தாறேகே இஸ்லாம்- மௌலான அக்பர் ஷா கான் நஜீபா பாதி)

அராபியாவில் ஐயாமுல் ஜாஹிலிய்யா காலத்தில் திருமணம் எனபது மலினப் பட்ட ஒரு சம்பிரதாயமாகவே இருந்திருக்கிறது.

ஒரு பெண் நிறைய ஆண்களுடன் எவ்வித ஆட்சேபனையும் இன்றி தொடர்பு வைத்துக் கொள்வாள்.

அவள் கர்ப்பம் தரித்ததன் பின்னர் , தன்னுடன் தொடர்பு கொண்ட அனைத்து ஆண்களையும் ஓரிடத்துக்கு அழைப்பாள்.

அவர்கள் அனைவரும் வந்ததன் பின்னர் அவள் ஒருவனை சுட்டிக் காட்டி இவன்தான் தனது கர்ப்பத்துக்கு காரணமானவன் என்று சுட்டிக் காட்டுவாள்.

அவன் அவளது குழந்தையின் தந்தையாக முடிவு செய்யப் படுவான்.

இது இஸ்லாத்துக்கு முந்திய மலினப்பட்ட அராபிய குடும்ப வாழ்வின் ஒரு அம்சம்.

ஒரு பெண் குறிப்பிட்ட சில ஆண்களுடன் மாத்திரம் தொடர்பு கொள்வாள்.

அவள் கர்ப்பம் தரித்து குழந்தை கிடைத்தவுடன் அவளுடன் உறவு கொண்டவர்கள் அனைவரும் அழைக்கப் படுவார்கள்.

அங்க அடையாளங்களை வைத்து தகப்பனை முடிவு செய்யும் நிபுணர் அழைக்கப் படுவார்.

அவர் குழந்தையின் அங்க அடையாளங்களையும், தகப்பனாரின் அங்க அடையாளங்களையும் ஒப்பிட்டுப் பார்த்து அந்தக் குழந்தையின் தந்தையை முடிவு செய்வார்.

இது அறியாமைக் கால அரேபியாவின் இன்னுமொரு மலினப் பட்ட குடும்ப வாழ்வின்,  குழந்தைப் பிறப்பின் ஒரு அம்சம்.

ஒரு கணவன் அராபியாவின் முக்கிய பிரபுக்களில் ஒருவனை தெரிவு செய்து தனது மனைவியை அவனுடன் உறவு கொள்ள அனுப்பி வைப்பான்.

அவள் கர்ப்பம் தரிக்கும்  வரை அக் கணவன் அவளுடன் எதுவித உறவும் வைத்துக் கொள்ள மாட்டான்.

அவள் கருத்தரித்தன் பின்னர் அவன் விரும்பினால் அவளுடன் உறவு கொள்வான்.

இராஜ இரத்தம் ஓடும் குழந்தைக் கிடைக்க வேண்டும் என்கிற நப்பாசையில் இப்படியான ஒரு தரம் கெட்ட இழிகுணம் அய்யாமுல் ஜாஹிளிய்யவில் அந்த அராபியரிடம் இருந்து வந்தது.

இன்றும் கூட அராபிய கிழட்டு மன்னர்கள் அநியாயமாக ஒரு இளம் பெண்ணை மணப்பதும் அதன் பின் அவள் கருத்தரித்ததன் பின்னர் அவளை விவாக விடுதலை செய்வதும் ஒரு சம்பிரதாயமாக அந்த மண்ணில் அழிந்து போகாமல் இருப்பது, இந்த பிரபுத்துவ குழந்தைப் பிறப்பின் எச்சப் பட்ட மிச்சமாகும்.

இந்த மூன்று முறைகளையும் எதுவித மறுப்பும் இல்லாமல் ஏற்று அம்முறைகளை மிகவும் கவனமாக பேணி வந்தவர்களாகவே பனு உமையாக்கள் இருந்து இருக்கிறார்கள்.

ஆகவே, அமீர் முஆவியாவுடைய பிறப்பு இம் மூன்று முறைகளில் ஒன்றாகவே நிகழ்ந்து இருக்கும்.

அமீர் முஆவியாவின் நிஜத் தந்தை அபூ சுபியான் இல்லை என்பது இந்த சடங்கு சம்பிரதாயங்களில் இருந்து இப்பொழுது தெளிவாகி இருக்கும்.

அநாகரீகமான இத்தகைய சம்பிரதாயங்களுக்கு பனு ஹாசிம்களும், இன்னும் சில முக்கிய கோத்திரங்களும் தமது எதிர்ப்பைக் காட்டிக் கொண்டுதான் இருந்திருக்கிறார்கள்.

அவர்களிடையே திருமணம் என்பது , கட்டாயமான ஒழுக்கவியல் சம்பிரதாயமாக இருந்து வந்திருக்கிறது.

நபி (ஸல்) அவர்களுடையதும் அன்னை கதீஜா (அலை) அவர்களுடைய    பிறப்பும், அவர்களது திருமணமும்   இதற்கு ஒரு சான்று.
 
திருமண கலாட்டாக்கள் இப்படி இருக்க, அபூ சுபியான் அவரது திறமையால் அகாலத்தில் இருந்த பெரும் வணிகர்களில் ஒருவராக திகழ்ந்தார்.

இந்தப் பணப் பெருக்கு அவருக்கு அந்த சமூகத்தில் பெரும் செல்வாக்கை பெற்றுக் கொடுக்க , அவருக்கு அந்த சமூகத்தின் தலைவராக வேண்டும் என்கிற 'ஆசை' துளிர்க்கிறது.

ஆனால், அஹ்லுல் பைத்களின் மூதாதையர்களைப் பற்றியும், அவர்களது பிறப்புகள் பற்றியும் அப்பழுக்கு இல்லாத வரலாறு இருந்தது.

இதனால் அராபிய சமூகத்தின் தலைமைத்துவத்தை பனு ஹாசிம்கள் இயற்கையாகவே பெற்றிருந்தார்கள்.

நபி (ஸல்) அவர்களே தனது மூதாதையர்களில் இருபத்து ஐந்து தலை முறையினரைப் பற்றி விலாவாரியாக விவரித்து இருக்கிறார்கள்.

இயல்பாகவே தன்னகத்தில் கொண்டிருந்த ஒழுக்கவியல் பண்பாடுகள், தலைமைத்து தகுதி ஆகியன பனு ஹாஷிம்களுக்கு அக்கால அராபிகளிடமும்   குறைஷிகளிடையேயும் இயற்கையாகவே தலைமைத்துவத்தை பெற்றுக் கொடுக்கிறது.

இஸ்லாம் அந்த அராபிகளிடம் முற்று முழுதாக தனது செல்வாக்கை செலுத்தியதன் பின்னர் , தலைமைத்துவ  செல்வாக்கு யாரிடம் போவது என்பதில் 'பனிப்' போர் ஆரம்பம் ஆகிறது.

இந்த நிலையில் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் தலைமைத்துவத்துக்கு எது வித குலப் பெருமையும் தன்னில் கொண்டிருக்காத அபூ சுபியானின் 'பனு உமையா'க்களும், வரலாற்றுக்கு முந்திய வரலாறை தன்னகத்தில் கொண்டிருந்த 'பனு ஹாஷிம்'களுக்கும்  இடையே முறுகல் வலுக்கிறது.

ஹசரத் அலி அவர்களின் படு கொலைக்குப் பின்னர் ,அமீர் முஆவியா இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் மன்னராக முடி சூடுகிறார்.

அவர் மன்னராக முடி சூடிய பின்னர் அவருக்கு அவரது இழிபிறப்பு இரகசியத்தின் வீரியத்தை குறைக்க வேண்டிய சூழ் நிலை உருவாகிறது.

அவருக்கு எதுவிதமான குலப் பெருமையும் இல்லை.

பிறந்த பிறப்பிலும் பெருமைப் படக் கூடிய தூய்மை இல்லை.

ஒரு தகப்பனுக்கு பிறந்தவர் என்று கூறும் உறுதிப்பாடும் இல்லை.

ஒரு தகப்பனுக்கு பிறந்தவரும் இல்லை.

இதற்கு முடிவு கட்ட என்ன செய்வது?

இதன் விளைவாகவே, நபிகளாரின் பெற்றோரை நரகத்துக்கு அனுப்பி நபி (ஸல்) அவர்களை அவமதிக்கும் செய்கையில் அமீர் முஆவியாவின் குடும்ப கௌரவம் காப்பாற்றப் படும் செய்கைகள் ஆரம்பமாகத் தொடங்கின.

அமீர் முஆவியா, பணத்துக்கு விலை போன மார்க்க அறிஞர்களைக் கொண்டு நபி (ஸல்) அவர்களின் குடும்பத்துக்கு எதிரான 'கதைகளை' அற்புதமாக புனையத் தொடங்கினார்.

இஸ்லாத்தின் போர்வையால் அவைகளை மக்கள் மயப்படுத்தினார்.

இதில் முதலாவது இலக்கு ரசூல் (ஸல்) அவர்களின் 'பனு ஹாஷிம்' குலம்.

போட்டார்கள் ஒரு போடு! இப்ராஹீம் (அலை) உடைய தந்தை நரகவாதி!

சில காலம் செல்ல , போட்டார்கள் இன்னொரு போடு!

பாவம் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.அவர் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் அவரது தாயும் தந்தையும் நரகவாதிகள். எவ்வளவு பெரிய துரதிர்ஷ்டசாலிகள்?

அமீர் முஆவியாவின் தாய் ஹிந்தாவும் ,தகப்பன் அபூ சுபியானும் அல்லாஹ்வின் அருள் பெற்றவர்கள். எனவே அல்லாஹ் அவர்களுக்கு ஹிதாயத்தை நாடினான். அவர்கள் இஸ்லாத்தை ஏற்று முஸ்லிம்கள் ஆனார்கள்.எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலிகள்!?

அது மட்டுமா?

நபி (ஸல்) அவர்களை கண்ணும் கருத்துமாக வளர்த்த அவரது பெரிய தந்தை அபு தாலிப், அவரும் நரகவாதி.

நபி (ஸல்) அவர்களது பிரார்த்தனையை ஏற்று, பின்னாளில் இஸ்லாத்தில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தி பல பிரிவுகளுக்கு இஸ்லாம் பிரிந்து போக காரணமாக இருந்த ஹசரத் உமர் (ரலி) அவர்களுக்கு 'ஹிதாயத்தை' கொடுத்த அல்லாஹுத்தாலா இங்கே நபி (ஸல்) அவர்களின் பிரார்த்தனையை மறுத்து அபு தாலிப் அவர்களை நரகத்துக்கு அனுப்புகின்றான்????

 முஆவியாவின் மகன் 'யசீத் ' எப்பேர்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்?

அவரது தாத்தா 'அபு சுபியான்' ஒரு முஸ்லிம்.

அவரது பாட்டி 'ஹிந்தா' ஒரு முஸ்லிம்.

அவரது தகப்பன் 'முஆவியா' ஒரு முஸ்லிம்.

ஆனால் இந்த உலகத்தை ஆசை வைத்து?????? அவருடன் அநியாயமாக அவரது ஆட்சிக்கு எதிராக போரிட்டு 'கர்பலாவில்' படு தோல்வி    அடைந்த இமாம் ஹுசைனின் பாட்டனார்  அபு தாலிப் நரகவாதி??? அவரது பாட்டனார் முஹம்மத் (ஸல்) அவர்களின் தாயும் தந்தையும்நரகவாதிகள்???

நபி (ஸல்) அவர்களது குடும்பத்தவர்களுக்கு எதிரான கருத்துக் கலகங்களின் ஆரம்பம்  இப்படித்தான் இஸ்லாத்தின் கடும் பகைவர்களினால் மக்கள் மயப்படுத்தப் பட்டன.

இத்தகைய துரதிஷ்ட நிலையில் நபி (ஸல்) அவர்களின் 'ஹதீத்' களும், அவர்களது 'சுன்னாவும்', உண்மையான இஸ்லாமும் நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தவர்களிடம் மட்டுமே பாது காப்பாக இருக்கும் நிலை உருவானது.

நபி (ஸல்) அவர்களது மரணப் படுக்கையிலேயே இந்த நாடகங்களின் முதல் அத்தியாயம் சஹாபாக்களின்   ஒரு குழுவினரால்  பலவந்தமாக   அரங்கேற்றப் பட்ட விடயம் எங்களது உலமாக்கள் மட்டுமே அறிந்த பகிரங்க இரகசியம்.

இந்த இரகசியங்களினால் வரும் வேதனைகளை ஜீரணித்துக் கொள்ள நாம் நிர்ப்பந்திக்கப் பட்டு இருக்கிறோம்.

எங்களது வாய்களை நாங்களே கைகளால் பொத்திக் கொண்டு  அலறுவதால் எங்களது வேதனையை யாரும் கண்டுக் கொள்வது இல்லை.

நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பிறகு வந்த முதல் மூன்று கலீபாக்களின் காலத்தில் நபி (ஸல்) அவர்களது 'ஹதீத்களை'  எழுதுவதற்கு விதிக்கப் பட்ட 'அரசியல்' தடை, அஹ்லுல் பைத்களின் எதிரிகளுக்கு
கிடைத்த பொன்னான வரப்பிரசாதமாக அமைந்தது.

ஹசரத் அபூபக்கர் (ரலி) தனது ஆட்சி காலத்தில் ஐநூறு ஹதீத்களை சேகரித்து வைத்து இருந்தார்.

ஆயிஷா  (ரலி) அறிவிக்கிறார்கள்;

"ஒரு நாள் இரவு எனது தந்தையார் காலைவரை மனக் குழப்பமுற்று இருப்பதை கண்டேன். காலையில் அவர் என்னிடம் 'நான் சேர்த்து வைத்து இருக்கும் ஹதீத்களை கொண்டு வா' என்றார்.

நான் கொண்டு வந்து கொடுத்தேன்.

அவற்றை கையில் எடுத்த அவர் அவைகளை தீயிட்டு கொளுத்தினார்."
(ஆதாரம்; அலா அல் தீன் முத்த்கியின் - கன்சுல் உம்மால்)

" ஹதீத்களை யார் வைத்து இருந்தாலும் அவற்றை அவர்கள் தீக்கிரையாக்கி விட வேண்டும் " என்று அரச அறிவிப்பாக ஹசரத் உமர் (ரலி) அவரது ஆட்சியின் போது சகல நகரங்களுக்கும் எழுதி ஆணையிட்டார்.
(ஆதாரம்; கன்சுல் உம்மால்) 

"உமர் (ரலி) உடய ஆட்சி காலத்தில் மக்கள் ஹதீத்களை அறிவித்து, அவற்றை சேகரிக்க தலைப்பட்டனர்.

இதனால் ஹதீத்கள் பெருகின.

அத்தகைய ஹதீத்கள் அவரிடம் கொண்டு வரப்பட்ட போது அவர் அவற்றை தீயிலிடுமாறு கட்டளையிட்டார்."
(ஆதாரம்; தபகாத் இப்னு சஆத் )
  .  
'அல் குரானின்' வசனங்களுடன் ஹதீத்கள் ஒன்றாக இணையும் அபாயம் இருந்தது என்று அக்காலத்தில் அந்த செய்கைக்கு நொண்டிச் சாக்கு சொல்லப்பட்டது.

இனி புகாரி ஹதீத் கிரந்தத்தில் இருக்கின்ற மிக நீண்ட ஹதீத் ஒன்றில் இப்படி வருகிறது;

"................ இதோ ! இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு நான் சொன்ன செய்திகளை அறிவித்து விடுங்கள்.ஏனெனில்,இந்த செய்தி எவரிடம் தெரிவிக்கப் படுகின்றதோ அவர்தாம் யாரிடம் இருந்து இதை கேட்டாரோ அவரை விட நன்கு பாதுகாப் பவராயிருக்கலாம்." என்று ஒலிக்கிறது.
(ஆதாரம் - புஹாரி ஐந்தாம் பாகம் 4406   வது ஹதீத்)

நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளை எழுதுவதற்கு நபி (ஸல்) அவர்களே அனுமதித்து இருக்க, முதல் மூன்று கலீபாக்கள் அதனை ஏன் தடுத்தார்கள் என்பதற்கு  யாருக்குமே அப்போது விடை தெரியவில்லை.

ஆனால், இந்த செய்கைகளின் பின்னணியில் முற்று முழுக்க 'உமையாக்கள்' இருந்த இரகசியம் காலப் போக்கில் துலாம்பரமாகியது.

இனி நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அபு தாலிப் அவர்களது விடயத்துக்கு வருவோம்.

அபு தாலிப் அவர்களது இஸ்லாம் பற்றி இந்த தளத்தில் உள்ள 'அபு தாலிப்' நரகவாதியா?'வை நீங்கள் "கிளிக்" பண்ணினால் மிக விரிவாக அவரது இஸ்லாத்தை பற்றி தெரிந்து கொள்ள முடியும். 

இதில் இல்லாத இன்னொரு வஞ்சிக்கப் பட்ட அப்பாவி நபி இப்ராஹீம் (அலை) அவர்களுடைய தந்தை.

இனி ,அவர்களைப் பற்றி கொஞ்சம் கவனிப்போம்.

"இன்னும் , மிகைத்தவனும், கிருபை மிக்கவனுமான இறைவன் மீது முழு நம்பிக்கை வைப்பீராக"

"அவன் எத்தகையவன்  என்றால், உம்மை பார்த்துக் கொண்டு இருக்கிறான் , நீர் நிற்கும் பொழுதும் "

"ஸுஜூது செய்கின்றவர்களில் நீர் புரண்டு , புரண்டு வந்ததையும்."

(அல் குரான் 26   :  217  முதல் 219  வரையுள்ள ஆயத்துகள்)                   ),

தப்சீருடைய விரிவுரையாளர்களில் அநேகர் , நாம் மேலே எடுத்து சொன்ன அல் குரான் ஆயத்துகள் நபி (ஸல்) அவர்களின் வம்ச வழிமுறையை விளக்குவதாக குறிப்பிட்டு உள்ளார்கள்.

'ஸுஜூது' என்றால் இணை வைக்காத நிலையில் இறைவனுக்கு முற்றிலும் அடிபணிதல் என்று பொருள் படும்.

'ஸுஜூது ' செய்கின்றவர்களில் நீர் புரண்டு புரண்டு வந்தது..' என்பதன் கருத்து அல்லாஹ்வுக்கு இணை வைக்காத அவரது மூதாதையர்களான நல்லடியார்களின் முள்ளந்தண்டில் இருந்து நபி (ஸல்) அவர்கள் இந்த உலகில் பிறக்கும் வரை தொடராக வந்த அவரது நிலையைக் குறிக்கிறது என்பதாகும்.

அல் குரானின் இந்த நட் சான்றின் அடிப்படையில் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் தந்தையும் நபி (ஸல்) அவர்களது மூதாதையரும் அல்லாஹ்வுக்கு இணை வைக்காத நல்லடியார்கள் எனபது ஆய்வுகளுக்கு அப்பாட் பட்ட இறுதி முடிவாகும்.

வாசிலா பின் அல் அஸ்கவு (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீதை கவனியுங்கள்.

"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்" அல்லாஹ், இஸ்மாயில் (அலை) அவர்களின் வழித் தோன்றல்களில் ' கிணானாவை' தேர்ந்தெடுத்தான்.'கிணானாவின் ' வழித் தோன்றல்களில் 'குரைஷியரைத்' தேர்ந்தெடுத்தான்.'குறைஷியரில் 'பனு ஹாசிம்' குலத்தாரை  தேர்ந்து எடுத்தான். 'பனு ஹாசிமகளில் ' இருந்து என்னைத் தேர்ந்து எடுத்தான்."
(ஆதாரம்- முஸ்லிம் நான்காம் பாகம்- 4573  வது ஹதீத்)

நபி (ஸல்) அவர்களின் வழித் தோன்றலின் சிறப்பும் , அதன் தூய்மையும்   இப்பொழுது புரிந்து இருக்கும்.  

நபிகளாரின் பெற்றோர்கள் நரகவாதிகள் என்று 'உமையாக்களின்'  சான்றுகளை வைத்துக் கொண்டு முடிவுக்கு வந்த உலமாக்களின் உயரிய ஆய்வுக்கும், ஆதாரபூர்வமான எதிர்ப்பு ஆய்வுரைக்கும் இக் கட்டுரை சமர்ப்பணம்.

5 comments:

Aboothalib said...

You are wrong the quran translation that you given above is wrong,
the translation i found:
இன்னும், (யாவரையும்) மிகைத்தவனும், கிருபை மிக்கவனும் ஆகிய (இறை)வனிடமே முழு நம்பிக்கை வைப்பீராக!
26:218 الَّذِي يَرَاكَ حِينَ تَقُومُ
26:218. அவன், நீர் (தனித்து வணங்குவதற்காக) நிற்கும்போது, உம்மைப் பார்க்கிறான்.
26:219 وَتَقَلُّبَكَ فِي السَّاجِدِينَ
26:219. இன்னும், ஸஜ்தா செய்வோருடன் நீர் இயங்குவதையும் (அவன் பார்க்கிறான்)

அஹ்லுல்பைத் said...

அபூதாலிப் என்ற பெயரில் வந்த நண்பரின் வருகைக்கும், உவந்தளித்த பின்னூட்டத்திற்கும் நன்றி.

Dr.Anburaj said...

Every human society is evolving socially,culturally , morally, spiritually ...etc.
Hindustan and Arabia is not exception to that.Your article is an eloquent proof for that.It is unfair for Allah to judge those pre koranic period people based on Koran,which advocates inhuman treatment to women/slave women/war captive women /women belonging to opposite side of Muslims.The Arabian /Muslims society must evolve beyond Koran.Koran is responsible for the cultural,spiritual and philosophical stagnation, for which the present day social diseases prevalent in Arabia is responsible.Let us grow beyong Koran and Mohammed.

Unknown said...

அல்லாஹ் நம் ரசூலுல்லாஹ்வின் பரிசுத்தமான பெற்றோர்களின் பொருட்டால் நம்மையும் நம் குடும்பத்தாரையும் ஈமான் சலாமத்தோடு மரணிக்கும் பாக்கியத்தை தந்து மறுமையில் அவனது மன்னிப்பையும் லிகாவையும் சுவனத்தின் எல்லா வித பாக்கியங்களையும் பெற்று வாழ உதவி செய்வானாக ஆமீன்.

Unknown said...

அல்லாஹ் நம் ரசூலுல்லாஹ்வின் பரிசுத்தமான பெற்றோர்களின் பொருட்டால் நம்மையும் நம் குடும்பத்தாரையும் ஈமான் சலாமத்தோடு மரணிக்கும் பாக்கியத்தை தந்து மறுமையில் அவனது மன்னிப்பையும் லிகாவையும் சுவனத்தின் எல்லா வித பாக்கியங்களையும் பெற்று வாழ உதவி செய்வானாக ஆமீன்.

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad