அஹ்லுல்பைத் Headline Animator

Saturday, May 14, 2011

கலீபா அபூபக்கரின் தலைமைத்துவத்தை தனித்து எதிர்த்து நின்ற பாத்திமா (அலை).........தப்பு யார் பக்கம்??

எங்களது பதிவுக்கு வந்த நண்பர் இம்ராஸ் இஸ்லாமிய அரசியலின் முதலாவது பெண் போராளி அன்னை பாத்திமா (அலை) அவர்கள் பற்றிய எமது பதிவு சம்பந்தமாக பொதுவான ,அதே சமயம் மிகவும் ஆழமான ஒரு சந்தேகத்தை எழுப்பியிருந்தார்.

நாம் சொன்ன விடயங்களுக்குரிய வரலாற்று ஆதாரங்கள் ஏதாவது இருக்கிறதா என்பதுதான் அவரது சந்தேகம்.

அஹ்லுல் பைத்களுக்கு எதிரான கருத்தியல் சூழலில் வாழ்கின்ற அனைவருக்கும் இந்த சந்தேகங்கள் வருவது இயற்கை. 

தூரதிஷ்டவசமாக எங்களது சூழல் அத்தகைய அமைப்பிலேயே இருக்கிறது.

எனவே, அவ்வாறான சந்தேகங்கள் தோன்றுகின்ற அனைவருக்கும் அவரது கேள்வியில் பிறக்கின்ற பதிலில் தெளிவு இருக்கிறது.


இப்பொழுதும், வழமைப் போலவே , நண்பர் இம்ராசின் கேள்விக்கு விடையாக எங்களது சுன்னத் வல் ஜமாஅத் மார்க்க அறிஞர்களின் ஆதாரங்களையே நாம் கோடிட்டுக் காட்ட விழைகிறோம்.
முதலாம் கலீபாவுக்கும், அன்னை பாத்திமா (அலை) அவர்களுக்கும் இடையே முறுகல் நிலை   தோன்றுவதற்கு மூல காரணமாக அமைந்த இஸ்லாமிய தலைமைத்துவம் சம்பந்தப் பட்ட விடயத்தை முதலில் நாம் கவனிப்போம்.

இஸ்லாமிய வரலாற்றில்  மிக முக்கியமான நிகழ்வுகள் நிறைந்த வருடமாக ஹிஜ்ரி பத்தாவது வருடம் திகழ்கிறது.

அவற்றில் இரண்டு நிகழ்ச்சிகள் நபி (ஸல்) அவர்களின் மறைவு நெருங்கி விட்டதை எமக்கு சொல்லாமல் சொல்லின.

அராபிய தீபகற்பத்தில் அவசர அவசரமாக ஒரு செய்தி பறை அறிவிக்கப்பட்டது.

"எல்லோரும் இந்த வருடம் நபி (ஸல்) அவர்களுடன் 'ஹஜ்' செய்ய ஒன்றிணையுங்கள். 'ஹஜ்' செய்கின்ற முறையை அதன் மூலம் நேரிடையாகவே உங்களால் கற்றுக் கொள்ள முடியும். 

"இந்த 'ஹஜ்ஜில்' நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு முக்கியமான சில விடயங்களை சொல்லப் போகிறார்களாம்.

"பிறகு, நபி (ஸல்) சொன்ன விடயங்களையும், 'ஹஜ்' செய்கின்ற முறையையும்   நீங்கள் உங்களுக்குப் பின்னால் வரும் முஸ்லிம்களுக்கு கற்றுக் கொடுக்க முடியுமாம். சில சமயம், அடுத்த வருடம் நபி (ஸல்) அவர்கள் இதனை கற்றுத்தர எங்களுடன் இருக்க மாட்டார்களாம்."

செய்தி  காட்டுத் தீ போல எட்டுத் திசையும் பரவியது.

'ஹஜ்ஜதுல் விதா' என்கிற  இறுதி 'ஹஜ்ஜுக்'கு மக்கள் தயாரானார்கள்.

இஸ்லாமிய பேரரசின் உருவாக்கத்துக்குப் பிறகு , எஞ்சி இருக்கின்ற ஒரே கடமை அதுவும் இறுதிக் கடமைக்கான ஆரம்ப ஆயத்தங்கள் ஆரம்பிக்கப் பட்டு விட்டது.

ஏனெனில்; கலிமா, தொழுகை, நோன்பு, ஸகாத் உள்ளிட்ட அனைத்து சட்ட திட்டங்களும் வகுத்து, அவற்றை எப்படி நடைமுறைப் படுத்த வேண்டும் என்றும் செய்து காட்டியுமாகிவிட்டது.

இனி ஒன்றே ஒன்றுதான் பாக்கி.

எப்படி ஹஜ் கடமையை செய்வது?

அதனையும் நபி (ஸல்) ௦ அவர்கள் செய்துக் காட்டப் போகிறார்களாம்.

நபி (ஸல்) அவர்களின் இறுதி ஹஜ்ஜில் சுமார் பத்தாயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்துக் கொண்டார்கள்.சில வரலாற்று ஆய்வாளர்கள் ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரம் மக்கள் இந்த ஹஜ்ஜதுல் விதாவில் கலந்துக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டும் முறையை, கஹ்பதுல்லாஹ்வை இடம் சுற்றும் முறையை, கஹ்பாவில் தொழும் முறையை, ஷபா- மர்வாக்கிடையே ஓடும் முறையை, அரபாவில் தங்கி குர்பான் கொடுக்கும் முறையை சொல்லியும், செய்தும் காட்டி கற்றுக் கொடுத்தார்கள்.

மக்கள் அவரை துயர்ந்தார்கள்.

அவர் சொன்னபடி செய்தார்கள்.

மிகவும் ஆளுமையான ஒரு சொற்பொழிவை  நபி (ஸல்) அவர்கள் அரபா பெரு வெளியில் நிகழ்த்தினார்கள்.

"மக்களே! எனது வார்த்தையை கவனமாக கேளுங்கள்.இந்த வருடத்தைப் போல அடுத்த வருடம் இந்த இடத்தில் உங்களை காணும் வாய்ப்பை நான் பெறுவேனோ என்று எனக்குத் தெரியாது..........."

நபி (ஸல்) அவர்கள் சொன்ன இந்த வார்த்தையின் மூலம் அவர்கள் உலகை  விட்டும் பிரியப் போவதை சிலேடையாக மக்களுக்கு தெரியப் படுத்தினார்கள்.

பின்னர் அவர்கள் மக்களின் சொத்துக்களினதும், அவர்களது இரத்தங்களினதும் தூய்மையும் முக்கியத்துவத்தையும் பற்றி விளக்கினார்கள்.

"மக்களே! இன்றைய புனிதமான தினத்தைப் போல , இந்த புனிதமான மாதத்தைப் போல நீங்கள் உங்களது இறைவனை மறுமையில் சந்திக்கும் வரை உங்களது வாழ்க்கையும், உங்களது சொத்துக்களும் மிகவும் புனிதமானவை.

'அநீதமாக ஒருவரை கொல்லாதீர்கள். அநியாயமாக ஒருவரின் சொத்தை அபகரிக்காதீர்கள்.

"நீங்கள் உங்களது இறைவனை சந்திக்கும் நாளில் உங்களது செய்கைகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள்.நிச்சயமாக அவன் உங்களது செயல்களைப் பற்றி உங்களிடம் விசாரிப்பான்.

"நான் அவனுடைய செய்தியை உங்களுக்கு எடுத்து சொல்லி விட்டேன்.".
(ஆதாரம்- இப்னு ஹிஷாம்- சீரத்துன்  நபி) 

அமானிதத்தை பேணி நடக்குமாறும், வட்டி தடை செய்யப் பட்டு விட்டதாகவும் அன்றைய தினம் அவர்கள் அறிவித்தார்கள்.

புனித மாதங்களில் எக் காரணம் கொண்டும் இரத்தம் சிந்தப் படலாகாதென்றும், மிகவும் உறுதியாக பெண்களின் உரிமையை பேண வேண்டும் என்றும்  சொன்னார்கள்.

முஸ்லிம்கள் ஒருவருக்கு ஒருவர் சகோதரர்கள் என்று மீண்டும் ஒரு முறை அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தி  சொன்னார்கள்.

ஆனால், அன்றைய நிகழ்வுகளை நாம் மிக ஆழமாக , சரியாக கவனித்து பார்க்கும் பொழுது நபி (ஸல்) அவர்களின் அவதானத்தை முற்றிலும் ஆட்கொண்ட இன்னொரு விடயம் எல்லோருக்கும் மிக இலகுவாக புரிந்து போகும். 

 நபி (ஸல்) அவர்களின் முக்கிய கவனம் எல்லாம் இந்த செய்திகள்  எல்லாவற்றையும் விட முஸ்லிம் உம்மத்தின் எதிர்காலத்தைப் பற்றியதாகவே இருந்திருக்கிறது என்பதுதான் அந்த விடயம்.

ஏனெனில் , நபி (ஸல்) அவர்களுக்கு அவர்களது மறைவின் பின்னால் முஸ்லிம் சமூகம் எதிர் கொள்ளப் போகின்ற கொடுமைகளின் பயங்கரமான விளைவுகள் நன்கு தெரிந்து இருந்தது.
அந்த விளைவுகளின் விபரீதத்தில் இருந்து முஸ்லிம் சமூகத்தை காப்பாற்றக் கூடிய சரியான பாதையை இனங்காட்ட வேண்டிய கட்டாயத்தில் நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள்.

சாதாரண ஒரு முஸ்லிம் பாமரன் , நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் தோன்றப் போகும் தவறான பல பாதைகளில் இருந்து ,சரியான பாதையை தேர்ந்து எடுத்து தன்னை எப்படி அந்த தீங்கில் இருந்து காப்பாற்றிக் கொள்வது?

அத் திர்மிதி தனது ஹதீத் கிரந்தத்தில் இப்படி பதிவு செய்துள்ளார்.

ஜாபீர் இப்னு அப்துல்லாஹ் அல் அன்சாரி (ரலி)  அவர்கள் அறிவிக்கிறார்கள் "நான் நபி (ஸல்) அவர்களை அரபா வெளியில் அல் குஸ்வா என்கிற    அவர்களது பெண் ஒட்டகையின் மீது இருந்தவர்களாக மக்களுக்கு பிரசங்கம் நிகழ்த்திக் கொண்டு இருந்ததை கண்டேன்.

நபி (ஸல்) அவர்கள் " ஜனங்களே! எனக்குப் பின்னால் நீங்கள் வழி தவறி விடாது இருக்க உங்கள் மத்தில் நான் இரண்டு விடயங்களை விட்டு செல்கிறேன். அவற்றை நீங்கள் பற்றிப் பிடித்து இருக்கும் காலம் வரை ஒருபோதும் வழி தவற மாட்டீர்கள்.அவைகள் அல்லாஹ்வின் அல் குரானும் எனது குடும்பத்தினருமாகும்." என்று சொல்வதை நான் கேட்டேன்.
(ஆதாரம்- அத் திர்மிதி ஐந்தாம் பாகம் - பக்கம் 328 )


முஸ்லிம் ஹதீத் கிரந்தத்தில் பதிவாகி உள்ள ஒரு நீண்ட ஹதீதில் இப்படி வருகிறது;

இதன் அறிவிப்பாளர் யசீத் பின் ஹய்யான் (ரஹ்) அவர்களாவார்கள்.

"....................................................ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவுக்கும் மதீனாவுக்கும் இடையிலுள்ள 'கும்' எனும் நீர் நிலை அருகே எங்களிடையே நின்று உரையாடிக் கொண்டு இருந்தார்கள்.

அப்போது அவர்கள் அல்லாஹ்வைப் போற்றி புகழ்ந்து நினைவூட்டி அறிவுரை கூறினார்கள்."மக்களே கவனியுங்கள்! நானும் ஒரு மனிதனே.என் இறைவனின் தூதர் வரும் காலம் நெருங்கி விட்டது.அவரது அழைப்பை நான் ஏற்றுக் கொள்வேன்.

நான் உங்களிடையே கனமான இரண்டு பொருட்களை விட்டுச் செல்கிறேன்.அவற்றில் ஒன்று அல்லாஹ்வின் வேதமாகும்.அதில் நேர் வழியும் பேரொளியும் உள்ளது.ஆகவே அல்லாஹ்வின் வேதத்தை ஏற்று அதைப் பலமாக பற்றிக் கொள்ளுங்கள்." என்று கூறி , அல்லாஹ்வின் வேதத்தின் படி வாழுமாறு தூண்டினார்கள்.அதில் ஆர்வமும் ஊட்டினார்கள்.

பிறகு, "என் குடும்பத்தார் ஆவார்கள். 

என் குடும்பத்தார் விசயத்தில் (அவர்களை உங்களது வழிக் காட்டிகளாக ஏற்று அவர்களை பின்பற்றி வாழுமாறு )நான் அல்லாஹ்வின் பெயரால் நினைவூட்டுகிறேன். 

என் குடும்பத்தார் விசயத்தில் (அவர்களை உங்களது வழிக் காட்டிகளாக ஏற்று அவர்களை பின்பற்றி வாழுமாறு )நான் அல்லாஹ்வின் பெயரால் நினைவூட்டுகிறேன்.


என் குடும்பத்தார் விசயத்தில் (அவர்களை உங்களது வழிக் காட்டிகளாக ஏற்று அவர்களை பின்பற்றி வாழுமாறு )நான் அல்லாஹ்வின் பெயரால் நினைவூட்டுகிறேன்.
(ஆதாரம்; முஸ்லிம் பாகம் நான்கு; 4782  வது ஹதீத்.)

அல்லாஹ்வின் வேத நூலும் , நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினரும் ஒரே தராதரத்தில் ,இரண்டு கனமான பொருட்கள் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டு உள்ளதை கவனியுங்கள்.

அல்லாஹ்வின் வேத நூலுக்கான சரியான விளக்கத்தை நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தில் இருந்துதான் பெற்றுக் கொள்ள முடியும் என்பதே இதன் நிஜமான கருத்தாகும்.

இது தவிர, அன்றைய தினம் நபி (ஸல்) அவர்கள் இறைவனின் இறமைக்கு எதிராக மீன்டும் ஒரு முறை உலகை ஆளும் ஒரு தலைமத்துவத்தைப் பற்றி முன்னறிவித்தார்கள்.

இந்த ஹதீத் புஹாரி ஹதீத் கிரந்தத்தில் இப்படி பதிவாகி உள்ளது.

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது;

நாங்கள் நபி (ஸல்) அவர்கள் எங்களிடையே இருக்க, ஹஜ்ஜதுல் வதாவைப் பற்றி பேசிக் கொண்டு இருந்தோம்.

ஹஜ்ஜதுல் வதா என்பதன் கருத்து என்னவென்று எமக்குத் தெரியாது.

இந்நிலையில், நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றி "அல் மஷீஹுத் தஜ்ஜாலைப்" பற்றி கூறத் தொடங்கி, நீண்ட நேரம் அவனைப் பற்றியே சொன்னார்கள்.

அப்போது "அல்லாஹ் அனுப்பிய எந்த இறைத் தூதரும் அவனைப் பற்றி தம் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்தது இல்லை.

நுஹ் (அலை) அவர்கள் அவனைப் பற்றி எச்சரித்தார்கள். .

அவர்களுக்குப் பின்னால் வருகை தந்த இறைத் தூதர்களும் அவனைப் பற்றி எச்சரித்தார்கள்.

மேலும் உங்களிடையேதான் அவன் தோன்றுவான். அவனது தன்மைகளில் ஏதேனும் சில உங்களுக்குப் புலப் படாமல் போனாலும், நிச்சயமாக உங்களுடைய இறைவன் உங்களுக்குத் தெரியாதவனல்லன் எனபது உங்களுக்கு நன்றாகவே தெரியும்"-

இதை மூன்று முறை கூறினார்கள்.
பிறகு, "உங்கள் இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அவனோ  வலது கண் குருடானவன். அவனது கண் துருத்திக் கொண்டு இருக்கும் திராட்சைப் போன்றிருக்கும்" என்றார்கள்.

"அறிந்து கொள்ளுங்கள். உங்களது இந்த நகரத்தில், உங்களது இந்த மாதத்தில் உங்களது இந்த நாள் எப்படிப் புனிதமானதாக இருக்கின்றதோ அவ்வாறே அல்லாஹ் உங்களுக்கு உங்கள் இரத்தங்களையும், உங்கள் செல்வங்களையும்  புனிதமானவையாக ஆக்கியுள்ளான்." என்று நபி (ஸல்) அவர்கள் சொல்லிவிட்டு, "நான் (இறைச் செய்தியை )உங்களிடம் சேர்த்து விட்டேனா?" என்று மக்களிடம் கேட்டார்கள்.

மக்கள் "ஆம்" என்று பதில் சொன்னார்கள்.

நபி (ஸல்) அவர்கள் "இறைவா! நீ சாட்சியாக இரு" என்று மும்முறை கூறிய பிறகு,  "உங்களுக்கு என்ன நேரப் போகிறதோ! " அல்லது "அந்தோ பரிதாபமே!" கவனமாக இருங்கள். எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்வதன் மூலம் இறை மறுப்பாளர்களாக நீங்கள் மாறி விடாதீர்கள்" என்று சொன்னார்கள்'

(ஆதாரம்; புஹாரி ஹதீத் --கிரந்தம் ஐந்தாம் பாகம் ஹதீத் இலக்கம் 4402  :  4403  )

நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு தோன்றப் போகின்ற அபாயங்களைப் பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்லியாகி விட்டது.

இந்த அபாயங்களில் இருந்து மனித சமுகம் எப்படி தப்புவது?

மனித சமுகம் எதிர் கொள்ளப் போகின்ற இந்த அபாயங்களில் இருந்து தப்புவதற்கான வழி முறை தான் என்ன?

ஒவ்வொரு நபிமார்களின் மறைவிற்குப் பிறகு அந்த நபிமார்களின் 'சிஷ்யர்களும், மார்க்க அறிஞர்களும் ' அந்த சமுகத்தை வழி கெடுத்து உள்ளார்கள்.

இது தொண்டு தொட்டு வரும் மனித குல வரலாறு. 

ஆகவே, இறுதி நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு எம்மை வழி நடாத்த முன் வருகின்ற  இந்தப் "புரோகிதர்களை அல்லது இடைத் தரகர்களை"  நம்ப முடியாது? '

அப்படி என்றால் நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு எம்மை வழிநடாத்த யாருமே இல்லையா?

பெரும் சிந்தனையுடன்  சஹாபாக்கள் நபி (ஸல்) அவர்களுடன் மதீனா நோக்கி திரும்புகிறார்கள்.

அப்படித் திரும்பி வரும் வழியில் வைத்து 'கதீர் கும்'  என்ற இடத்தில் நடைபெற்ற இந்த இஸ்லாமிய தலைமைத்துவ   நியமன செயல் பற்றிய சம்பவம் ஹஜ்ஜதுல் விதா நடைபெற்ற ஹிஜ்ரி பத்தாம் வருடம்  பிறை பதினெட்டில் நடைபெற்றிருக்கிறது.

இப்பொழுது சவூதியில் இருக்கின்ற அல் ஜுஹ்பா நகரத்தை அண்டியிருக்கும் ஓர் இடம்தான் 'கதீர் கும்'மாகும்.

நபி (ஸல௦ அவர்களின் காலத்தில் ஹஜ்ஜுக்கு வருகை தந்த மக்கள் எல்லோரும் தத்தமது ஊர்களுக்கு பிரிந்து போகும் இறுதி எல்லை இதுதான்.

ஹஜ்ஜதுல் விதாவை முடித்து விட்டு திரும்பி வரும் வழியில் கதீர் கும்' என்கிற நீர் சுனையின் அருகே வைத்து அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், வரும் வழியில் திடீரென அல்லாஹ்வின்  புறத்தில் இருந்து "வஹி" அருளப்படுகிறது.

""தூதரே! உம் இறைவனிடம் இருந்து உம் மீது இறக்கப் பட்டதை (மக்களுக்கு) எடுத்துக் கூறிவிடும்;(இவ்வாறு) நீர் செய்யாவிட்டால் அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராக மாட்டீர்; அல்லாஹ் உம்மை மனிதர்களி ( ன்  தீங்கில் ) லிருந்து காப்பாற்றுவான்; நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத்தாரை நேர் வழியில் செலுத்த மாட்டான்." ( அல் குரான் 5   :   67   )

இஸ்லாமிய கடமைகள் யாவும் முற்று முழுதாக கடமை ஆக்கப் பட்டதன் பிறகு, இது என்ன புதிதாக ஒரு செய்தி முற்றுப் பெறாத இன்னுமொரு விடயத்தைப் பற்றி அருளப்படுகிறது?

அருளப் பட்ட ஆயத்தின் படி நபி (ஸல்) அவர்கள் சொல்லுகின்ற இந்த செய்தி தான் இறைவனின் தூதை முழுமைப் படுத்தப் போகிறது?

மனிதர்களுக்கு தயங்கித்தான் இதை இன்னும் நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு அறிவிக்கவில்லை.?

அத்தகைய மக்களை அலட்சியப் படுத்தி விட்டு அந்த இறை செய்தியை ஏனைய மக்களுக்கு அறிவிக்குமாறு "வஹி" அருளப்பட்டு விட்டது.

அது என்ன செய்தி?

மக்களை வழி கெடுக்கும் தஜ்ஜாலின் தலைமைத்துவத்துக்கு எதிரான , இறுதி நாள் வரை தீர்மானமாக இருக்கப் போகின்ற "இஸ்லாமிய தலைமைத்துவம்" பற்றிய செய்தி சொல்லப் படப் போகிறது.

இந்த ஆயத் அருளப் பட்ட உடனேயே உடனே நபி (ஸல்) அவர்கள் அந்த இடத்திலே தரித்து நின்று உடனே, தம்முடன் வந்தவர்களுக்கு ஒரு பிரசங்கம் நிகழ்த்துகிறார்கள்.

சேய்த் இப்னு அர்கம் அறிவித்ததாக அபூ துபைல் அறிவிக்கும் இந்த அறிவிப்பு அல் ஹாகிம் உடைய அல் முஸ்ததர்க்கில் பின்வருமாறு பதியப்பட்டுள்ளது:

"நபி (ஸல௦ அவர்கள் ஹஜ்ஜதுல் விதாவை முடித்து விட்டு திரும்பும் வழியில் 'கதீர் கும்' என்கிற இடத்தில் திடீரென நின்றார்கள்.

"அவர்களுடன் வந்த அவரது தோழர்களுக்கு அவ்விடத்தில் இருந்த ஒரு மரத்தின் அடியில் கூட்டி துப்புரவு செய்யுமாறு வேண்டினார்கள்.

"தோழர்களும் மரத்தின் அடியில் கூட்டி துப்புரவு செய்தார்கள்.

"அதன் பின்னர் நபி (ஸல௦ அவர்கள் 'அல்லாஹ்வின் கட்டளைக்கு பதில் சொல்ல வேண்டிய நிலையில் நான் இருக்கிறேன்.

"நான் உங்கள் மத்தியில் இரண்டு பெறுமதியான பொக்கிஷங்களை  விட்டு செல்கிறேன். அதில் ஒன்று மற்றையதை விட பெறுமதி கூடியது.

"அவை இரண்டும், அல்லாஹ்வின் வேதநூலும், எனது குடும்பத்தவர்களான எனது அஹ்ளுல்பைத்களுமாகும். அவை இரண்டின் விஷயத்திலும்  மிகக் கவனமாக நடந்துக் கொள்ளுங்கள். ஏனெனில், இவை இரண்டும் மறுமையில் நியாய தீர்ப்பு நாளில் நீர் தடாகத்திடம் என்னை சந்திக்கயும் வரை ஒன்றை விட்டும் மற்றொண்டு ஒரு போதும் பிரியப் போவது இல்லை."

இதனை சொல்லிவிட்டு தொடர்ந்து சொன்னார்கள்."நிச்சயமாக அல்லாஹ் எனது 'மௌலா'வாகும்.(பாது காவலன் அல்லது தலைவன்).அனைத்து விசுவாசிகளுக்கும் நான் மௌலாவகும்.(பாது காவலன் அல்லது தலைவன்)யார் யாருக்கு எல்லாம் நான் மௌலாவோ அவர்களுக்கு எல்லாம் இந்த அலி மௌலாவாகும் (பாது காவலன் அல்லது தலைவன்).


"அலியை நேசிப்பவர்களை அல்லாஹ்வும் நேசிக்கிறான். அலியுடைய விரோதிகளுடன் அல்லாஹ்வும் விரோதம் கொள்கிறான்.


(ஆதாரம்; அல் முஸ்த்தாதர்க் மூன்றாம் பாகம் பக்கம் 109 )

நபி (ஸல்) இந்த உரையை அவரது சஹாபாக்கள் மத்தியில் உரையாற்றி முடிந்தவுடன் இமாம் அலியிடம் வந்த உமர் (ரலி) இமாம் அலிக்கு பைஆத் செய்துவிட்டு சொன்னார்கள் " அபூதாலிபின் புதல்வரே! என்னுடைய நல் வாழ்த்துக்கள் உங்கள் மீது உண்டாகட்டும். இன்று காலை நீங்கள் பெரும் அருள்  பெற்றவராக  மாறி விட்டீர்கள்.இன்று நீங்கள் அனைத்து மூமின்களினதும் ஏகோபித்த தலைவராக ஆகி விட்டீர்கள்"

மீர் செய்யிது அலி ஹமாதாணி என்பவர் ஸாபி மத்கபின் முக்கிய அறிஞர்களில் ஒருவர்.

அவர் அவரது மவத்தாத் அல் குர்பாவில் (ஐந்தாம் பாகம்) உமர் (ரலி) சொன்னதாக பிவருமாறு அறிவிக்கிறார்கள்.

"நபி (ஸல்) அவர்கள் கதீர் கும் மில் வைத்து சஹாபாக்கள் மத்தியில் உரை நிகழ்த்தி கொண்டிருக்கும் பொழுது உமர்  (ரலி) க்குப் பக்கத்தில் அழகிய வாட்ட சாட்டமான ஒரு வாலிபர் உட்கார்ந்து இருந்தார்.


அவரை உமர் (ரலி) இதற்கு முன்னர் எங்குமே காணவில்லை.


நபி (ஸல்) அவர்கள் இமாம் அலியின் கையை உயத்தி அவரை மூமின்களின் தலைவராக நியமித்ததன் பின்னர் உமர் (ரலி) அவர்களுக்கு பக்கத்தில் அமர்ந்து இருந்த வாட்ட சாட்டமான அந்த வாலிபர்"  நிச்சயமாக இது இஸ்லாமிய தலைமைத்துவத்தின் ஒப்பந்தப் பத்திரமாகும்."நயவஞ்சகர்களை தவிர வேறு எவரும் இந்த ஒப்பந்தத்தை முறிக்க மாட்டார்கள்." என்ற அவர் உமரை நோக்கி "உமரே ! நீங்கள் இந்த ஒப்பந்தத்தை முறிப்பவர்களில் ஒருவராக இருக்க வேண்டாம். " என்று கூறி இருக்கிறார்.


இந்த சம்பவத்தை உமர் (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் கூறிய பொழுது , நபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) யை நோக்கி "அது உண்மையை உங்களுக்கு சொல்லித் தந்த ஜிப்ரீல் (அலை) ஆவார்கள்" என்று சொன்னார்கள்.

அன்றைய தினம் அங்கு சமூகம் அளித்து இருந்த அனைத்து சஹாபாக்களும் இமாம் அலியை தங்களது தலைவராக ஏகமனதாக ஏற்றுக் கொண்டு அவருக்கு பைஆத்தும் செய்தார்கள்."

அதில் முதலாவது நபர் உமர் (ரலி௦ ஆவார்கள்.

இஸ்லாத்துக்குள் ஊடுருவி இருந்த இஸ்லாத்தின் எதிரிகள் நபி (ஸல்) அவர்கள் நிகழ்த்திய அந்தப் பிரசங்கத்தையும், முஸ்லிம் உம்மாவின் தலைமைத்துவம் பற்றிய விடயங்களையும் திரிபு படுத்தி குழப்பி விட்டார்கள்.


சஹாபாக்களின் மன நிலையை நன்கு அறிந்து இருந்த நபி (ஸல்) அவர்கள் தனது மறைவுக்கு முன்னர் இந்த இஸ்லாமிய தலைமைத்துவ நியமனம் சம்பந்தப்பட்ட விடயத்தை ஒரு ஆவணமாக எழுதுவதற்கு முயற்சித்து இருக்கிறார்கள்.

ஆனால், ஹசரத் உமரும் அவரது ஆதரவாளர்களும் அதற்கு தங்களது எதிர்ப்பை பகிரங்கமாக காட்டினார்கள். 


அதனால், இந்த இஸ்லாமிய தலைமைத்துவ நியமனப் பத்திரம் நபி (ஸல்) அவர்களினாலேயே எழுதப் பட்ட ஆவணமாக எங்களுக்கு கிடைக்காத துரதிர்ஷ்ட நிலை எங்களது சமூகத்துக்கு ஏற்பட்டது.

(இது சம்பந்தமான மேலதிக விபரங்களுக்கு , இதே தளத்தில் "நபிகளாரின் வேண்டுகோளே நிராகரித்த் ஹசரத் உமர் (ரலி) என்கிற பதிவை பார்க்குமாறு உங்களை வேண்டுகிறோம்.)

ஆனால், அஹ்லுல் பைத்களின் ஆதரவாளர்கள் இது இமாம் அலியின் முஸ்லிம் உம்மாவின் மீதான அவரது ஆன்மீக உலகாயுத தலைமைத்துவத்தை பிரகடனம் செய்யும் சம்பவம் என்று கூறி இந்த சம்பவத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து இதனை அச்சொட்டாக இந்த நிமிடம் வரை பின்பற்றி வருகிறார்கள்.

என்றாலும், இதற்கு நேர் மாற்றமாக சுன்னத் வால் ஜமாத்தினரில் சில அறிஞர்கள் இதற்கு முரண் பட்ட கருத்தியலில் , அவர்கள் வழிக் கெட்டது போதாது என்று எம்மையும் வழிக் கெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அவர்கள் இந்த சம்பவம் சிதைந்து போன இமாம் அலியின் கண்ணியத்தைக் காப்பாற்றும் நோக்குடனும், இமாம் அலியின் ஆன்மீக தலைமைத்துவத்தை ஸ்த்திரப்படுத்தும் நோக்குடனும் நபி (ஸல்) அவர்கள் செய்ததாக கூறுகிறார்கள்.

எது எப்படிப் போனாலும் அஹ்லுல் பைத்களின் ஆதரவாளர்களும், சுன்னத் வல் ஜமாஅத் அறிஞர்களும் (அந்த முரண் பட்ட கருத்துக் கொண்ட அறிஞர்கள் உட்பட)  ஏகோபித்த நிலையில் இமாம் அலி அவர்களை தங்களது ஆன்மீக தலைவராக  (கலீபாவாக) - இமாமாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

இப்பொழுது சொல்லுங்கள்?

நபி (ஸல்) அவர்கள் நியமித்த  அந்த தலைமையை ஏற்றுக் கொண்டதன் பின்னால், இன்னுமொரு தலைமை அந்தத் தலைமைக்கு எதிராக திடீரென தோற்றம் பெற்றால் அந்த புதிய தலைமைக்கு எதிராக எழுந்து கிளர்ந்து நிற்பது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமை அல்லவா?

சுவனத்தில்  பெண்கள் அனைவரினதும் தலைவியாக இருக்கும் நபி மகள் பாத்திமா(அலை) அவர்களுக்கு நரகத்தை விட்டும் அவரது சமூகத்தவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு இருக்கிறது அல்லவா?


அன்னை பாத்திமா (அலை) அவர்கள் இந்தக் கடமையைத்தான் செய்திருக்கிறார்கள்.

சொல்லுங்கள் பார்க்கலாம்....தப்பு யார் பக்கம்?

நீங்கள் அப்பொழுது அங்கே இருந்து இருந்தால் யார் பக்கம் இருந்து இருப்பீர்கள்? 
முதலாவது  கலீபா  அபூபக்கர்  (ரலி) 

நபி மகள் பாத்திமா (அலை)



3 comments:

Sahana said...

அல்குர்ஆனையும் அஹ்லுல்பைத்தையும் இஸ்லாத்தின் மூலாதாரமாகக் கொண்டால் நபிகளாரின் ஹதீஸை என்ன செய்வது?

அஹ்லுல்பைத் said...

சஹானாவின் பின்னூட்டத்திற்கு நன்றி.

உங்களது காரமான கருத்துக்கு ஒரு பதிவே பதிலாக தேவைப் படுகின்றது.

விரைவில் அந்தப் பதிலுடன் உங்களை சந்திக்கின்றோம்.

அதுவரை, அஹ்ளுல்பைத்கள் என்றால் யார் என்ற புரிதலில் உங்களது கேள்விக்கான விடை ஒளிந்து இருக்கிறது என்கிற சாடையான கொசுறு செய்தியுடன் விடைபெறுகிறோம்.

நன்றி! மீண்டும் சந்திப்போம்.

Dr.Anburaj said...

Better make a new one

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad